எனக்கு மட்டும் 10 வருடம் ஜெயிலா? மதுரை கோர்ட்டுக்கு போன நிர்மலா தேவி..!
மதுரை

மதுரை: தன்னுடைய 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய உத்தரவிட பேராசிரியை நிர்மலா தேவி, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்..
இந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் நடந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய உத்தரவை மதுரை ஹைகோர்ட் பிறப்பித்திருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு, பேராசிரியை நிர்மலா தேவி மீதான விவகாரம், தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும், சலசலப்பையும், விமர்சனங்களையும் உண்டுபண்ணியிருந்தது.
தனியார் கல்லூரியின் பேராசிரியரான நிர்மலாதேவி, தன்னிடம் பயின்ற கல்லூரி மாணவிகளை, தவறான பாதைக்கு அழைத்து சென்றதுதான், இவர்மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த முயன்றபோதுதான், அவரது தனிப்பட்ட விவகாரங்களும், அவரது வாக்குமூலத்தின் மூலமே வெளியாகி அதிர்ச்சியை தந்தது..
அதிர வைத்த வாக்குமூலங்கள்
தான் யார் யாருடன் நட்பு வைத்திருந்தேன்? தொடர்பு கொண்டிருந்தேன் என்பதை பற்றியெல்லாம் விரிவாக போலீசாரிடம் அப்போது, கூறியிருந்தார். அந்தவகையில் கருப்பசாமி பற்றியும் வாக்குமூலம் தந்திருந்தார்.
"2018, மார்ச் 12ம் தேதி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இயக்குனரை கருப்பசாமி, எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி சொன்னார். அங்கிருந்து கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.
கருப்பசாமியுடன் காரில் சென்றேன்
அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்றேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இதெல்லாம் நிர்மலா தேவியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், கல்வி பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்திருந்ததுதான் பிரதான குற்றச்சாட்டாக கிளம்பியது.. இறுதியில், இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்தும், பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருந்தது..
மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல்
இந்த தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரி நிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கல்லூரி மாணவிகளை, பாலியல் ரீதியாக தவறாக வழி நடத்திய வழக்கில் எனக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன்.
இந்த வழக்கில், 2 வது மற்றும் 3 வது குற்றவாளிகளான மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
எந்த மாணவியும் பாதிக்கப்படவில்லை
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்து உள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காக தான், நான் மாணவிகளிடம், செல் போனில் பேசி முயற்சி செய்தேன். இருப்பினும் இந்த சம்பவத்தில் எந்த மாணவியும் பாதிக்கப்படவில்லை.
துரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்த பிறகு, என்னை பல பிரிவுகளில் தண்டித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. எனவே, இந்த வழக்கில், எனக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த மனு, உயர்நீதிமன்ற கிளையில், நீதிபதி புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, பேராசிரியை நிர்மலா தேவியின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பிரதான வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார். பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் BBT Cinema யூடியூப் சேனலுக்கு, திமுக வழக்கறிஞர் தமிழ்வேந்தன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், நிர்மலா தேவி வழக்கில் கவர்னர் ஒருவரின் பெயர் அடிபட்டது.. ஆனால், அதற்கு மறுப்பு எதுவும் சொல்லப்படவில்லை.. கவர்னர் தரப்பில் கடந்துதான் போனார்கள்..
மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களையும் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பெற்றார்களா? ஆனால், அந்த மாணவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.. அதேபோல, எத்தனையோ பேராசிரியர்களின் பெயர்கள் இந்த விவகாரத்தில் அடிபட்டாலும், அவர்கள் எல்லாருமே குற்றவாளி ஆக்கப்படவில்லை.. மொத்த பேரும் சொல்வது நிர்மலா தேவியை மட்டும்தான். நிர்மலா தேவிக்கு நான் சப்போர்ட் செய்யவில்லை. ஆனால், உண்மை பாதிதான் வெளியே வந்திருக்கிறது. விசாரணையும் முழுமையாக தேவை.." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.