கூலி கொடுக்கவிலை என்று கூறி இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றதால் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை.!
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கூலி கொடுக்கவிலை என்று கூறி இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றதால் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனத்தை பறித்துச் சென்ற 2 பேர் கைது
குரிசிலாப்பட்டு போலிசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (54) இவருக்கு அதே பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஜடையனுர் பகுதியை சேர்ந்த மயில்குமார்(32), வெங்கடாசலம் (54) ஆகியோர் இவருடைய நிலத்தில் டிராக்டர் ஒட்டி நெல் நாற்று நடுவதற்கு ஆட்களை வேலைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அதற்காக ரூபாய் 12 ஆயிரம் கூலி தருவதாக பேசப்பட்டுள்ளது. பின்னர் வேலை முடிந்து ரூபாய் 6 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், மீதி பணத்திற்கு பதிலாக மீதி இருந்த நெல் நாற்றுகளை கொடுத்து அதனை விற்று அதில் வரும் பணத்தில் வேலை ஆட்களுக்கு கூலி கொடுத்து விடு என்று கூறி மீதம் இருந்த நெல் நாற்றுகளை அவர்களிடம் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் அவ்வப்போது பணம் கொடுக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஜெகன்நாதன் ஜடையனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோர் வழிமறித்து பணம் கொடு என்று கேட்டுள்ளனர்.அவர் கொடுக்க மறுத்ததால் அவருடைய இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த ஜெகன்நாதன் வீட்டிற்கு வந்து பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவரது உறவினர்கள் இவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இவரது மனைவி ராணி குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில்
காவல் துறையினர் மயில்குமார், வெங்கடாசலம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்