புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு. !

புதுச்சேரி தேர்தல்

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு. !

புதுவையில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும்.

ஆனால், புதுவையில் திமுக கூட்டணியிலும் சரி, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியிலும் சரி இழுபறி நீடித்து வந்தது. இதில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.

அதேபோல என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் விஜய்யின் தவெகவுடன் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இறுதியாக, பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி, புதுவை பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவை இன்று சந்தித்துப் பேசிய நிலையில் கூட்டணி உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாள்களாக மன்சுக் மாண்டவியாவைச் சந்திப்பதை ரங்கசாமி தவிர்த்து வந்ததாகக் கூறப்பட்டது.

தற்போது கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும் அதிமுக, பாஜக, லட்சிய ஜனநாயகக் கட்சி 14 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த 14 இடங்களில், பாஜக 10 தொகுதிகளிலும் அதிமுக 2 தொகுதிகளிலும் லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே புதுவையில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.