பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.! மீண்டும் பா.ம.க.வில் சலசலப்பு.!

பா.ம.க

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்.! மீண்டும் பா.ம.க.வில் சலசலப்பு.!

விழுப்புரம் : பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பாமக மாநாடு மேடையில் இளைஞரணி தலைவர் முகுந்தனுக்கு இருக்கை அளிக்கப்படாதது ஏன் என்றும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததால், மோதல் போக்கு உருவாகி இருக்கிறது. ஏற்கனவே பாமக தலைவராக நானே இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்ததோடு, நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டவன் என்றும் கூறி இருந்தார்.

இருப்பினும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மாமல்லபுரம் அருகே மே 11ஆம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். அதேபோல் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மாநாடு மேடையில் திலகபாமாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞரணி தலைவரான முகுந்தனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த விவகாரமும் பாமக நிர்வாகிகளிடையே விவாதமாக மாறியது.

இந்த நிலையில் பாமக மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை தைலாபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பாமக மாநாட்டில் இளைஞரணி தலைவர் முகுந்தனுக்கு இருக்கை அளிக்கப்படாதது ஏன் என்றும் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசிய பேச்சுகள் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்னும் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அப்பா, மகன் மற்றும் பேரன் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, பாமகவினர் சோகத்தில் இருக்கின்றனர். இதனால் இவர்கள் மூவருக்குள் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பாமக நிர்வாகிகள் முயற்சிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் நாளை நடக்கவுள்ள பாமக ஆலோசனை கூட்டம் குறித்த் எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது.