வேங்கைவயல் பிரச்சினையை சிபிஐ -க்கு மாற்ற வேண்டும்.! எடப்பாடி கே.பழனிச்சாமி. !
புதுக்கோட்டை
வேங்கை வயல் வழக்கில் மக்கள் பிரச்சனையை உணர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 'புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜன.24.) குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப் பத்திரிக்கையில், ஒருவரை பழிவாங்குவதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிய வருகிறது. குற்றம் சுமத்தப்பட்ட நபரின் தாய், தந்தை, மனைவி உள்ளிட்ட குடும்ப நபர்களே தண்ணீர் அருந்துவார்கள் என்ற நிலையில், இதுபோன்ற குற்றத்தை எந்த மனிதரும் செய்யத் துணியமாட்டார்கள். இந்நிலையில், தமிழக அரசின் காவல்துறை, இதுபோன்ற ஒரு குற்றப் பத்திரிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது நம்பும்படியாக இல்லை.
எதையோ மூடி மறைக்க, காலம் கடந்த அவசர குற்றப் பத்திரிக்கையாகவே இது கருதப்படுகிறது.
திமுக-வின் கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், வேங்கைவயல் பிரச்னையில் தமிழகக் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சிபிஐ விசாரணை கோரி உள்ளது. திமுக-வின் கூட்டணிக் கட்சிகள், மக்கள் பிரச்னையை உணர்ந்து தற்போதாவது குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்நிகழ்விலும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.