சொத்து தகராறு காரணமாக டிராக்டர் ஏற்றி தந்தையை கொன்ற மகன். !
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சொத்து தகராறில் தந்தையை டிராக்டரால் ஏற்றி கொன்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது ஒடுவன்குப்பம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் பழனி (70).
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் இரண்டாம் மனைவியின் முதல் மகன் சந்திரசேகர் (வயது 40) என்பவருக்கும் அவரது தந்தைக்கும் சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அதே கிராமத்தில் உள்ள ஏரிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக பழனி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பழனியை அவரது மகன் சந்திரசேகர் டிராக்டரால் பழனி மீது ஏற்றிக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் வருவதற்குள் சந்திரசேகர் டிராக்டருடன் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டாச்சிபுரம் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், உயிரிழந்த பழனியின் உடலை மீட்டு பிரித பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தினை விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா நேரில் பார்வையிட்டு குற்றவாளியை விரைந்து பிடிக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். சொத்து தகராறில் தனது தந்தையை டிராக்டரில் ஏற்றி கொன்ற மகனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.