வாகனப் பதிவிற்கு லஞ்சம் கேட்டு மாட்டிக் கொண்ட ஆர்.டி.ஓ.!
திருநெல்வேலி

திருநெல்வேலி: அரசின் துறைகளில், ஏராளமான பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு, வருவாய்த்துறை துறை விளங்குகிறது..
எனவேதான் இந்த துறையில் லஞ்ச புகார்கள், அதையொட்டிய கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன. இந்நிலையில், நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் லுத்தர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம்.. இவர் 2024 மார்ச் மாதம் இனோவா கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.. பிறகு, திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிகமாக பதிவு செய்துள்ள நிலையில், நிரந்தர பதிவு செய்ய முயன்றார்.
ஆசை ஆசையாக வாங்கிய கார்
இதற்காக, தன்னுடைய நண்பர் லாரன்ஸ் என்பவரின் உதவியுடன், வாகன பதிவு சான்று கட்டணம், ஆயுள்கால வரி மற்றும் தாமத கட்டணம் என மொத்தம் ரூ.4,35,490 செலுத்தினார்..
அத்துடன், கடந்த ஜனவரி 22ம் தேதி வள்ளியூர், ஆர்டிஓ ஆபீசுக்கு சென்று, அங்கிருந்த ஆய்வாளர் பெருமாளிடம் வாகன ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால், ஆய்வாளர் பெருமாள், காரை நிரந்தரமாக பதிவு செய்ய வேண்டுமானால், ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று கேட்டாராம்.
கறார் - பிடிவாதம் ஆபீசர்
இதற்கு பிறகு, மீண்டும் கடந்த ஜனவரி 28ம் தேதி ஆய்வாளரை சந்தித்துள்ளார் சுரேஷ் பாக்கியம்.. அப்போது ஆய்வாளர் பெருமாள், அதே ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சுரேஷ் பாக்கியம் சொன்னதுமே, லஞ்சத் தொகையை 15 ஆயிரம் ரூபாயாக பேரம் பேசி குறைத்தாராம் பெருமாள். அப்போது சுரேஷ் பாக்கியம், தன்னிடம் ரூ.10 ஆயிரம் தான் இருக்கிறது என்றாராம்.
அதற்கு ஆய்வாளர், அப்படியானால், மிச்சம் ரூ.5000 நாளை வரும்போது தர வேண்டும் என்று கூறி, இந்த 10000 பணத்தை, கூகுள் பே மூலம், ஒரு செல்போன் நம்பருக்கு அனுப்ப சொன்னாராம்.. சுரேஷ் பாக்கியமும், அவர் சொன்னபடியே, அந்த செல்போனுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் ஆர்சி புத்தகத்தை ரிலீஸ் செய்வேன் என்று ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் பெருமாள்..
எங்கே போனார் பெருமாள்
ஆனால், மறுநாளே ரூ.5 ஆயிரம் புரட்ட முடியாமல் திணறிய சுரேஷ் பாக்கியம், கஷ்டப்பட்டு வாங்கிய காருக்கு, எதற்காக லஞ்சம் தர வேண்டும் என்று நினைத்து, ஆய்வாளர் மீது திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தந்துவிட்டார்.
இந்த புகாரின்பேரில், வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் அதற்குள் பெருமாளுக்கு தெரிந்து, ஒரு வாரமாக டியூட்டிக்கே வரவில்லையாம். எப்படியிருந்தாலும் அவர் அலுவலகத்துக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதால், போலீசார் அவரிடம் விசாரிக்க காத்து கொண்டிருக்கிறார்கள்.