முன் விரோதம் காரணமாக சட்டக்கல்லூரி மாணவர் கொலை. ! திடுக்கிடும் தகவல்கள்.!

குற்றம்

முன் விரோதம் காரணமாக சட்டக்கல்லூரி மாணவர் கொலை. ! திடுக்கிடும் தகவல்கள்.!

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர் வழிமறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சேரன் மகாதேவி அடுத்த கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் நேரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை கமிட்டி நடு நிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து உள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் அந்த நபர்.

பின்னர் இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் உயிரிழந்தார்.  

பின்னர் இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோட்ராங்குளம் பகுதியில் சொத்து பிரச்னை காரணமாக நடைபெற்ற கொலைக்கு பழிக்குப் பழியாக சேரன் மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கொலை செய்த மாயாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னதாக நேற்று காலை பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாசல் முன்பு மாயாண்டி என்ற இளைஞர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்தக் கொலையும் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.