கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவாரா பொன்முடி.! பதவிகள் பறி போயும் வாய் பேசுவதால் தலைமைக்கு சென்ற தகவல். !
முன்னாள் அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் என்றாலே பொன்முடி என்று பெயர் பெற்று வந்தது. ஆனால் சில காலமாக தன் வாயால் தேவையயற்ற விசயங்களை பொது வெளியில் பேசி வந்தார்.
அதனால், அவரது கட்சி பதவியான துணைப் பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாக பறித்தார். பின்னர், அவரது அமைச்சர் பொறுப்பும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதனால், தான் கட்டி ஆண்ட விழுப்புரம் மாவட்டத்தில் தன் புகைப்படம் கூட கட்சி பேனர்களில் இடம் பெறாத போன நிலை இருந்தாலும், தொடர்ந்து தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடி, தன் பதவியை பறித்த கட்சி தலைமையையும் இதற்கு காரணமானவர்களையும் கடுமையாக விமர்சித்து பேசி வருவதாக பரபரப்பு தகவல் அறிவாலயத்திற்கு சென்றிருக்கிறது.
திமுக தலைமை, அதிகாரிகளை அவதூறு பேசும் பொன்முடி?
கட்சி பொறுப்பும், அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்ட பொன்முடி, அதனை தாங்கிக் கொள்ள முடியாமலும் தன்னுடைய உள்ளக் குமுறலை வெளிப்படுத்த முடியாமல் இருந்து வந்தார். குறிப்பாக, கட்சி பதவி பறிப்புக்கு பிறகு முதல்வரை சந்திக்க சென்னை கிளம்பிய பொன்முடிக்கு பாசிட்டிவாக எந்த பதிலும் முதல்வர் தரப்பிலிருந்து வரவில்லை. அதற்கு காரணம், பொன்முடிக்கு எதிராக திமுகவின் இன்னொரு துணைப் பொதுச்செயலாளரும் முதல்வரின் தங்கையுமான கனிமொழியே பகிரங்கமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்ததுதான். அதுமட்டுமில்லாமல், முதல்வரிடம் பல மகளிர் பொன்முடியின் பேச்சு குறித்து மன வேதனையுடன் பேசிய காரணமும் சேர்ந்து பொன்முடிக்கு எதிரான கடுமையான கோபத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளது. அதன் காரணமாக, கட்சி பொறுப்பு பறிப்புக்கு பின்னர் அவரது அமைச்சர் பதவியும் தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கப்பட்டது.
இதனால் கோபமான பொன்முடி, சமீபத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்கும்போதெல்லாம், விழுப்புரத்தில் என்னால்தான் கட்சி வளர்ந்தது என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்திற்கும் தான் விசுவாசமாக இருந்ததற்கு இப்போது பரிசு கிடைத்திருக்கிறது என்றும் பேசியிருப்பதாக அவருடைய தரப்பில் தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, தன்னுடைய பதவி பறிப்பிற்கு கோட்டையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இரண்டு முக்கிய அதிகாரிகள் தனக்கு எதிராக முதல்வரிடம் பேசியதே காரணம் என்றும் அவர் பொங்கித் தள்ளியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, விழுப்புரத்தில் யாருக்கு புதிய பதவி கொடுத்தாலும் தன்னால் மட்டுமே திமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க முடியும். லட்சுமணன் போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றியும் உளவுத்துறை திமுக தலைமைக்கு ரிப்போட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்டெட்டில் முதல்வர், அடுத்த ஆக்ஷன் இதுதான் ?
பதவியை பறித்தும் வாய் துடுக்காக தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசி வரும் பொன்முடியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை சில நாட்களுக்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தால் மட்டுமே அவர் அமைதியாக இருப்பார் என்று முதல்வருக்கு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இல்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் லட்சுமணன் உள்ளிட்டவர்களின் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளை பொன்முடியின் ஆதரவாளர்கள் செய்வார்கள் என்பதால், அது தேர்தல் பணிகளை பாதிக்கும் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைமையும் ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பு மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கதாகும்.
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு
97 87 41 64 86