ஓரே நாளில் விசாரணை செய்து தீர்ப்பா? எல்லா வழக்குகளிலும் இப்படி வேகம் காட்டலாமே? உச்சநீதிமன்ற நீதிபதி.!

ஜனநாயகன்

ஓரே நாளில் விசாரணை செய்து தீர்ப்பா?  எல்லா வழக்குகளிலும் இப்படி வேகம் காட்டலாமே? உச்சநீதிமன்ற நீதிபதி.!

டில்லி: விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரிக்க தாங்கள் விரும்பவில்லை என்றும், மீண்டும் உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதி இந்த வழக்கை ஒரே நாளில் விரைவாக முடித்து வைத்த விதம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார். "இது ஒரு அசாத்திய வேகம். 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 7 ஆம் தேதி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், அதனை மறு ஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், "சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்தது.

ஜனநாயகன் பட வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்துக்கு (CBFC) உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த மனு இன்று (ஜனவரி 15) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக இன்று கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி , CBFC அனுமதிக்கு முன் வெளியீட்டு தேதியை அறிவிப்பது நீண்டகாலமாக நிலவும் ஒரு நடைமுறை, 5000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, எனவே சென்சார் சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, நீதிபதி தீபங்கர் தத்தா, தனி நீதிபதி இந்த வழக்கை ஒரே நாளில் விரைவாக முடித்து வைத்த விதம் குறித்து கருத்து தெரிவித்தார். "அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை தாக்கல் செய்த ஓரிரு நாட்களுக்குள் தீர்த்து வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இது எல்லா வழக்குகளிலும் நடக்க வேண்டும். இது ஒரு அசாத்திய வேகம். 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 7 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி டிவிஷன் பெஞ்சில் இந்த வழக்கு தீர்க்கப்படும்போது, ​​அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு." எனத் தெரிவித்தார்.

மேலும், சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை ஜனவரி 20 ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளதால், இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி தீபங்கர் தத்தா குறிப்பிட்டார். இதையடுத்து, "திரைப்படம் ஒரு அழிந்து போகக்கூடிய பொருள். இவை அனைத்தும் ஒரே காரணத்திற்காக செய்யப்படுகின்றன" என்று முகுல் ரோஹத்கி வாதிட்டார்.

அதற்கு நீதிபதி தீபங்கர் தத்தா, "நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். பின்னர் ஜனவரி 20 ஆம் தேதியே உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று ரோஹத்கி நீதிமன்றத்தைக் கோரினார். அதற்கு நீதிபதி, 20 ஆம் தேதியே உயர்நீதிமன்ற அமர்வு மேல்முறையீட்டு வழக்கை முடிவு செய்யலாம் எனத் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.