சிங்கத்தின் கால்கள் பழுதுப்பட்டாலும் சீற்றம் குறையாது என மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேச்சு.!

விழுப்புரம்

சிங்கத்தின் கால்கள் பழுதுப்பட்டாலும் சீற்றம் குறையாது என மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேச்சு.!

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், கூட்டத்தில் பங்கேற்க செயல் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அன்புமணியை செயல் தலைவர் என்றே குறிப்பிட்டார் ராமதாஸ். மேலும் சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும் சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லை என்றும் சீற்றம்தான் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அந்த சீற்றம் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்றும் ராமதாஸ் தெரிவித்தார். பாமக தனியாக போட்டியிட்டாலும் 40 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்றும் கூறிய ராமதாஸ், பாமக நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார். பாமகவில் கோஷ்டி மோதல் கிடையாது எனவும் கோஷ்டி மோதல் மார்கழி மாதத்தில்தான் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சிலர் களைப்போடு இருப்பதால் இந்த கூட்டத்துக்கு வரவில்லை என்றும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சில நிர்வாகிகள் கூறியதாகவும் தெரிவித்தார். செயல் தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது, அவர் வரலாம் அல்லது வந்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். கட்சியில் அவர்களாகவே விரும்புகிற வரை யாரையும் நீக்க தேவையில்லை என்றும் செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியபடி மாற்றப்படுவார்கள் என்றும் கூறினார்.

50 தொகுதிகளில் படுத்து கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தாகவும் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை கூறியதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்த அன்புமணியை ஏன் பாராட்டவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் தெற்கத்தூர் ஆறுமுகத்தை மட்டும் குறிப்பிட்டு பாராட்டினீர்கள் என்றும் அன்புமணி பெயரை குறிப்பிடவில்லை என்பதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ் அன்புமணியை தான் பாராட்டி பேசியதாக தெரிவித்தார். மேலும் செயல் தலைவர் அன்புமணி என்று சொன்னதாகவும், தெக்கத்தூர் ஆறுமுகம் இரண்டு மாதமாக இங்கேயே அமர்ந்து வேலைகளை பார்த்தார் என்றும் அவரை பாராட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.