புத்தாண்டை முன்னிட்டு இரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி.!

புதுச்சேரி

புத்தாண்டை முன்னிட்டு இரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி.!

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் ஒருவித கொண்டாட்டம் தான். உலகம் முழுவதும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

குறிப்பாக புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை மக்கள் மிகவும் வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடுகிறார்கள். ஆடம்பரமான ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், தங்கும் விடுதிகள், பார்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு மக்கள் கலந்து கொள்வார்கள். இங்கு பல சிறப்பு நிகழ்வுகள் நடக்கும், குறிப்பாக தனியார் ஹோட்டல்களில் பெரிய பார்ட்டிகள் நடத்தப்படும். இந்த கொண்டாட்டங்களுக்கு மக்கள் இப்போது இருந்தே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து ஏராளமான இளைஞர்களும், பெண்களும் புதுச்சேரிக்கு வருவார்கள். அதிக மக்களை வரவழைக்க புதுச்சேரி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றன. புதுச்சேரி என்றாலே மதுபானங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும். காரணம் அங்கு மதுவிற்கான வரி மிகவும் கம்மியாக இருக்கும். பொதுவாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். அதே சமயம் ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மதுபான கடைகள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டும், 2025 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, மதுக்கடைகள் மற்றும் பார்கள் கூடுதல் நேரம் திறந்திருக்க கலால்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கலால் துணை கமிஷனர் மேத்யூ பிரான்சிஸ், அனைத்து மதுபான கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், புதுச்சேரியில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு வரை மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு கடை இரவு 11 மணிக்குப் பிறகு மது பானங்களை விற்க விரும்பினால், அவர்கள் அரசுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். வழக்கமான கடைகளுக்கு, 5,000 ரூபாய் கட்டணமும், பார் வசதி இருந்தால் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க 10,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.

ரெஸ்டோ பார் அல்லது ஹோட்டலாக இருந்தால் 5,000 ரூபாய் கட்டணம், ஹோட்டலில் சிறப்பு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தால் 15,000 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புத்தாண்டு இரவு மதுபான கடைகளை கூடுதல் நேரம் திறக்க விரும்பினால் அதற்கான உரிய கட்டணத்தை செலுத்தி அனுமதி பெற வேண்டும். முன்பெல்லாம் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகள் திறக்க கலால்துறை அனுமதி அளித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.