தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்.!
பா.ஜ.க
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றில் யார் வேட்பாளர்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 26 தொகுதிகளுக்கு உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. மீதம் ஒன்று வெளியாகாதது ஏன் என தெரியவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தொகுதி அடையாளம் காணுதல், வேட்பாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. அதன் பிறகு பிரச்சாரம் செய்யவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இன்றும் நாளையும் வேட்பாளர்களை அறிவித்தாக வேண்டிய நிலையில் அனைத்து கட்சிகளும் உள்ளன.
அந்த வகையில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சென்னையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் யாரை வேட்பாளராகத் தேர்வு செய்வது என ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் தற்போது 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
மயிலாப்பூர்- தமிழிசை சவுந்திரராஜன்
தளி- அமர்பிரசாத் ரெட்டி
மொடக்குறிச்சி- கிருத்திகா சிவகுமார்
உதகை- போஜராஜன்
அவிநாசி- எல்.முருகன்
திருப்பூர் தெற்கு- ஏ.பி.முருகானந்தம்
கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
கந்தர்வகோட்டை- புரட்சி கவிதாசன்
புதுக்கோட்டை- ராமசந்திரன்
திருப்பத்தூர்- சோழன் சி.த.பழனிசாமி
மதுரை தெற்கு- ராம சீனிவாசன்
சாத்தூர்- நயினார் நாகேந்திரன்
திருச்செந்தூர்- கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர்- ஆனந்தன் அய்யாசாமி
ராதாபுரம்- பாலகிருஷ்ணன்
நாகர்கோவில்- பொன் ராதாகிருஷ்ணன்
விளவங்கோடு- விஜயதாரணி
ஆவடி- அஸ்வின்
திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்
தஞ்சாவூர்- கருப்பு முருகானந்தம்
திருவாரூர்- பண்ணைவயல் இளங்கோ
அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
ராசிபுரம்- பிரேம்குமார்
ராமநாதபுரம்- ஜி.பி.எஸ்.நாகேந்திரன்
பத்மநாபபுரம்- எட்வின் ஜோஸ்
மானாமதுரை- பொன் பாலகணபதி
இதில் குளச்சல் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இந்த தொகுதி புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா என தெரியவில்லை. நேற்றைய தினம் ஏசி. சண்முகம் இதை தெரிவித்திருந்தார். பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் ஒரு தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு வழங்குகிறது என்றார். ஒரு வேளை அந்த ஒரு தொகுதி குளச்சலா என தெரியவில்லை. ஆனால் குளச்சலில் புதிய நீதிக் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறதா என தெரியவில்லை. எனினும் தாமரை சின்னத்தில் நிற்பதால் அந்த தொகுதிக்கு புதிய நீதிக் கட்சி ஒப்புக் கொண்டதா என்ற விவரமும் கிடைக்கவில்லை.
எனினும் இது உத்தேச பட்டியல்தான். அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களின் பெயர் வெளியானால்தான் பல்வேறு விஷயங்கள் தெரியவரும். இந்த பட்டியலை வைத்து பார்க்கும் போது இந்த முறை குஷ்பு, வினோஜ் செல்வம், காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என தெரிகிறது.
அது போல் சென்னையில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. மேலும் இந்த உத்தேச வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இல்லை. தான் விரும்பிய தொகுதிகளை பாஜக கேட்டு பெறாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட போவதில்லை என தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளாராம். இது தொடர்பாக கட்சிக்கு அவர் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்தும் தனது அதிருப்தியை அண்ணாமலை வெளிப்படுத்தியுள்ளாராம்.
