ஓரங்கட்டப்படும் அண்ணாமலை, பேனர்களில் கூட படம் இல்லை, அண்ணாமலை ஆதரவாளர்கள் அப்செட்.!
அரசியல்

தமிழக பாஜக சார்பில் இன்று நடந்த கருத்தரங்க பேனர்களில் பாஜக நிர்வாகிகளின் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அண்ணாமலை படம் எங்குமே இல்லை. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அப்செட் ஆகி, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தமிழ்நாடு பாஜக சார்பில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கருத்தரங்கு கூட்டம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். மேலும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர்.
பேனர்களில் அண்ணாமலை படம் மிஸ்ஸிங்
இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர்களில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் படங்கள் இடம்பெறவில்லை. நயினார் நாகேந்திரன், பவன் கல்யாண் படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், தமிழிசை சௌந்தரராஜன், கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி ஆகிய மாநில நிர்வாகிகளின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
அண்ணாமலை ஆதரவாளர்கள் அப்செட்
இந்நிலையில், இந்த பேனர்களில் அண்ணாமலை படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக கூறி, இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். அண்ணாமலை புகைப்படம் இல்லாமல் யாரை வைத்து ஓட்டு கேட்க செல்வார்கள்? என பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அண்ணாமலை ஆதரவாளர்கள் பலரும் இந்த கருத்தரங்கை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக முதலில், 2,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. ஆனால், போதுமான அளவு கூட்டம் இல்லாமல் நாற்காலிகள் காலியாக இருந்ததால், சுமார் 1500 நாற்காலிகளை அகற்றிவிட்டு, 500 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டு கருத்தரங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வார் ரூம் அரசியல்
கடந்த மே 22 ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக்கூடாது, சோஷியல் மீடியா பதிவுகளை கண்காணிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் எச்சரித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தது. நயினார் நாகேந்திரன் தலைவராக ஆன பிறகும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் வார் ரூம்கள் மூலம் அதிமுகவை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருவதாக புகார் எழுந்தது.
நயினார் - அண்ணாமலை ஆதரவாளர்கள் உரசல்
இந்நிலையில் பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது என்று எச்சரித்தார். இதனால், நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையே உரசல் நீடித்தது. இந்நிலையில் தான், அண்ணாமலையின் புகைப்படத்தை தவிர்த்ததால், அவரது ஆதரவாளர்கள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான கருத்தரங்கை புறக்கணித்துள்ளது பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.