வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்.!

அரசியல்

வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்.!

வன்னியர் சங்க மாநாடு

வன்னியர் சங்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் 12 ஆண்டுகளாக இந்த மாநாடு, நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முதல்முறையாக வன்னியர் சங்க மாநாடு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மாநாடு திடல்

விழாவிற்காக 100 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்திற்கு மாமல்லபுரம் வரை அக்னி கலசம் பொறித்த வன்னியர் சங்க கொடிகளால் கிழக்கு கடற்கரை சாலை முழ்கியுள்ளது .

மேலும் எச்.டி. தரத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகளை இருக்கையில் அமர்ந்த நிலையில் தொண்டர்கள் கண்டுகளிக்க எல்இடி திரை வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு முகப்பு பகுதியில் வன்னியர்களின் அடையாள சின்னமான பிரம்மாண்டமாக 25 அடி உயரத்தில் அக்னி கலசம் வைக்கப்பட்டு உள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் படத்துடன் பிரம்மாண்டமான முகப்பு தோரண வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.

வன்னியர் சங்க மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக ஆடல், பாடவல்களுடன் கலை நிகழ்ச்சிகள், வன்னிய புராண நாடகம் நடைபெறுகிறது. பிறகு மாலை 6 மணி முதல் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். 8 மணி அளவில் அன்புமணி ராமதாஸ் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டிற்கு புறப்பட்ட வேன்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மகாபலிபுரத்தில் நடைபெறும் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது வேன் சீர்காழி அட்டகுளம் அருகே புறவழிச் சாலை இணைப்பு சாலையில் செல்லும்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் பயணம் செய்த மருவத்தூர் பகுதியை சேர்ந்த விஜய், முத்துராமன், தேவா, சுந்தர் உள்ளிட்ட ஆறு பேர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை

விபத்து குறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உடனடியாக நேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தார்.

வேன் வேகமாக வந்த நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மீது ஏறி செல்லாமல் இருக்க ஓட்டுநர் வேகத்தடை இல்லாத அருகில் உள்ள எதிர்திசை சாலையில் வேனை வேகமாக திருப்பிய போது ஓட்டுனரின் அஜாக்கிரதையால் விபத்துஏற்பட்டதாக வேனில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.