விளையாட்டு வினையானது. ! ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய அரசு. ! கிரிக்கெட் ரசிகர் பலி. !

IPL 2025

விளையாட்டு வினையானது. ! ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய அரசு. ! கிரிக்கெட் ரசிகர் பலி. !

பெங்களூருவில் உள்ள சின்ன சாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2025 போட்டிக்கான வெற்றியை ஆர் சி பி அணி பெற்றதை தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது தற்போது பல உயிர்கள் பலியாக காரணமாகிப் போனது.

இந்த நிகழ்வில் பல ரசிகர்கள் பலியாகியுள்ளனர். தற்போது வரை 11 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு கிரிக்கெட் வெற்றியை சாதாரணமாக கொண்டாடாமல், திருவிழா போல அரசே கொண்டாடியதன் விளைவு இந்த மரணங்கள் ஏற்பட்டு உள்ளன. அதிலும் கடந்த சில நாட்களாகவே ஆர்சிபி ரசிகர்கள் பொது இடங்களில் அடாவடி தனமாக, ஒழுக்கம் இன்றி கொண்டாடியதன் விளைவு நிலைமை மோசமாக காரணமாகிவிட்டது.

ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாமல் கூடியது, கடுமையாக சாலைகளில் அடாவடித்தனமாக கொண்டாட்டங்களை மேற்கொண்டது, விதிகளை மதிக்காமல் கொண்டாடியது, போலீஸ் விதித்த கட்டுப்பாடுகளை மீறியது ஆகியவை அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. மும்பை, சென்னை போன்ற அணிகள் 10கோப்பைகளை வென்ற போது நடக்காத இது போன்ற சம்பவம்.. பெங்களூர் அணி வென்ற முதல் கோப்பையிலேயே நடந்து உள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி விழாவைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். மாலை 3:00 மணிக்கே ரசிகர்கள் மைதானத்தின் வாயில்களில் கூட ஆரம்பித்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால், மைதானத்தைச் சுற்றியுள்ள எம்.ஜி. சாலை, கியூன்ஸ் சாலை, பிரிகேட் சாலை, சிவாஜி நகர், பன்னர்கட்டா சாலை, மற்றும் பி.ஆர். ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது.

தள்ளுமுள்ளுவும் காயங்களும்

அதிகப்படியான ரசிகர்களின் வருகையால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் காயமடைந்தனர். சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கே.எஸ்.சி.ஏ (KSCA) மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்கும் முன் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

பெங்களூருவில் இதுபோன்ற பெரிய நிகழ்வுகளை நடத்தும் போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது அவசியம் என்று காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெங்களூரில் இதுபோன்ற பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தும்போது, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் சரியான திட்டமிடல் அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். திட்டமிட்டபடி ஊர்வலம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது," என்றார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. கே.எஸ்.சி.ஏ நிர்வாகம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான சம்பவம்

அனுமதிக்கப்பட்ட டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருந்தவர்களை விட, அணியின் வீரர்களைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, மைதான வளாகத்திற்கு அருகிலுள்ள வடிகால் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கான்கிரீட் தளம் மீது அதிகப்படியான மக்கள் நின்றதால் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். நான் இப்போது எதையும் உறுதிப்படுத்த முடியாது. நான் மைதானத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நிறைய ரசிகர்கள் உணர்ச்சிவசமாக இருக்கிறார்கள்... நாங்கள் 5,000 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தோம், என்று அவர் பேட்டியில் தெரிவித்தார்.

செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு

97 87 41 64 86