கே.எல்.ராகுலை திட்டினாரா லக்னோ கிரிக்கெட் உரிமையாளர்.! மனம் திறந்தார் அமித் மிஸ்ரா.!
விளையாட்டு

ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மிகவும் கண்டிப்பானவராக அறியப்படுகிறார்.
2016இல் தொடரில் தோனி தலைமையில் புனே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லத் தவறியது. அதனால் 2011 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த இந்திய கேப்டன் என்றும் பார்க்காமல் அதிரடியாக தோனியை கழற்றி விட்ட அவர் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தார்.
அவரது தலைமையில் புனே அடுத்த வருடம் ஃபைனல் வரை சென்றது வேறு கதை. தற்போது லக்னோ அணியின் உரிமையாளராக இருக்கும் அவர் கடந்த வருடம் தங்கள் கேப்டன் கேஎல் ராகுலை பொதுவெளியில் திட்டும் வகையில் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது. அதனால் அந்த அணியில் இருந்து வெளியேறிய ராகுல் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
சஞ்சீவ் திட்டினாரா:
அந்த இடத்தில் தற்போது 27 கோடிக்கு விளையாடி வரும் ரிஷப் பண்ட் தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் சஞ்சீவ் கோயங்காவிடம் அதிருப்தியான பேச்சுக்களைக் கேட்டு வருகிறார். இந்நிலையில் கேஎல் ராகுலை அன்றைய நாளில் சஞ்சீவ் திட்டவில்லை என்று அப்போட்டியில் லக்னோவுக்காக விளையாடிய முன்னாள் வீரர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மாறாக வெற்றிக்காக கொஞ்சமாவது போராடியிருக்கலாமேயே என்ற வகையில் மட்டுமே சஞ்சீவ் பேசியதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த மோசமான தோல்விகளை சந்தித்த எந்த உரிமையாளரும் பாராட்ட மாட்டார்கள் என்றும் மிஸ்ரா கூறியுள்ளார். இது பற்றி மிஸ்ரா பேசியது பின்வருமாறு. “லக்னோ பயிற்சியாளரிடம் கடந்த வருடம் நான் பேசினேன். அப்போது அணியைத் தேர்வு செய்வது உட்பட அனைத்து முடிவுகளையும் ராகுல் தான் எடுப்பதாக அவர் சொன்னார்”
மிஸ்ரா மறுப்பு:
“ஆனால் இம்முறை அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. புதிய ஆலோசகராக பொறுப்பேற்ற ஜஹீர் கான் அனைவரிடமும் பேசுவதாகத் தெரிகிறது. பௌண்டரி எல்லையில் அவர் அனைத்து வீரர்களிடம் பேசுவதை நீங்களே பார்க்கிறீர்கள். அதே சமயம் ராகுல் – சஞ்சீவ் விவகாரத்தை ஊடகங்கள் அதிகமாக காண்பித்து விட்டது என்று நினைக்கிறேன். ஊடகங்கள் சொன்னது போல அங்கே எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை”
நாங்கள் அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாக தோற்றோம். கொல்கத்தாவில் 11 ஓவரில் தோற்ற நாங்கள் ஹைதராபாத் அணியிடம் வெறும் 9 ஓவரில் தோற்றோம். அப்போது எந்த உரிமையாளராக இருந்தாலும் தோல்வி பரவாயில்லை, கொஞ்சம் போராட்டத்தை காட்டுங்கள் என்று தான் சொல்லியிருப்பார்கள். சண்டையிட்டு தோல்வியை சந்தியுங்கள் பிரச்சனையில்லை என்றே அனைவரும் சொல்வார்கள். ஆனால் நாங்கள் மோசமாக தோற்றும் சஞ்சீவ் பெவிலியனில் எங்களிடம் வந்து உத்வேகத்தை கொடுக்கும் வகையிலேயே பேசினார். எதையும் தவறாகவோ அல்லது குரலை உயர்த்தியோ பேசவில்லை” என்று கூறினார்.