சிறந்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா. ! டென்ஷனில் வெற்றி வாய்ப்பை இழந்த சுப்மன் கில். !

கிரிக்கெட் IPL 2025

சிறந்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா. ! டென்ஷனில் வெற்றி வாய்ப்பை இழந்த சுப்மன் கில். !

மும்பை: நடப்பாண்டிற்கான ஐ பி எல் தொடரில் சிறந்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா உயர்ந்துள்ளார். தோல்வி நிலையின் போதும் ஹர்திக் பாண்டியாவின் அனுகுமுறை, அளிக்கும் பதில்கள் ஹர்திக்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உயர்வடைய செய்துள்ளது.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஹர்திக் திட்டங்கள்

இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் அடித்த 3 சிக்சர்கள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிய ஒன்றாகும். அதேபோல் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். ஏனென்றால் குஜராத் அணியின் டாப் ஆர்டர் வீரர்களை வீழ்த்த வேண்டும் என்பதால், பும்ராவை பவர் பிளேவிலேயே கொண்டு வந்தார்.

அஸ்வனி குமார் மீது விமர்சனம்

அது பலனளிக்கவில்லை என்றாலும், சான்ட்னரை அட்டாக் செய்ய வேண்டிய நிலைக்கு குஜராத் அணியை தள்ளியது. அதேபோல் 10வது ஓவர் வரை அமைதி காத்த ஹர்திக் பாண்டியா, 11வது ஓவரில் இன்பேக்ட் பிளேயரான அஸ்வனி குமாரை அட்டாக்கில் கொண்டு வந்தார். இதே அஸ்வனி குமாரை தோல்வியின் போது சிலர் விமர்சித்திருந்தனர்.

ஆதரவாக நின்ற ஹர்திக்

அப்போது ஹர்திக் பாண்டியா, கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் அஸ்வனி குமார் திறமையானவர் என்பதோடு நிறுத்தி கொள்ளாமல், அவருக்கு எங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று நம்பிக்கை அளித்தார். அந்த நம்பிக்கையை மீண்டும் வைத்து எலிமினேட்டர் போட்டியில் வாய்ப்பு அளித்தார். அதேபோல் இளம் வீரர்கள் ஃபீல்டிங்கின் போது செய்யும் தவறுகளை ஹர்திக் பாண்டியா கொஞ்சமும் சட்டை செய்வதில்லை.

18வது ஓவர்

ஆனால் இன்னொரு பக்கம் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் சிறிய ஃபீல்டிங் தவறு நடந்தாலும், தோள்களை துவளவிட்டு நம்பிக்கையை விட்டுவிடுகிறார். அதேபோல் பும்ரா என்ற துருப்புச்சீட்டை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை ஹர்திக் பாண்டியா நன்றாகவே அறிந்துள்ளார். அனைவரும் 19வது ஓவரை வீச பும்ரா வருவார் என்று நினைத்தனர்.

ஹர்திக் நிதானம்

ஆனால் ஆட்டத்தை 18வது ஓவரிலேயே முடிக்க வேண்டும் என்பதில் ஹர்திக் பாண்டியா தீவிரமாக இருந்தார். அதனால் 18வது ஓவரை பும்ரா கைகளில் கொடுக்க, குஜராத் அணியின் மொத்த திட்டமும் மாறியது. அதேபோல் ஒவ்வொரு பந்திலும் ஆட்டம் மாறிக் கொண்டே இருந்த போது, முகத்தில் கொஞ்சம் கூட ஹர்திக் பாண்டியா ரியாக்சனை கொடுக்கவில்லை.

ஹர்திக் நம்பிக்கை

இந்தப் பக்கம் சுப்மன் கில் ஒவ்வொரு சிறிய தவறுக்கும் கூட கத்தி கொண்டிருந்தார். ஒரு சிக்ஸ் போனாலும் கூட உடனடியாக பவுலரிடம் ஓடி சென்றுவிடுகிறார். ஆஷிஷ் நெஹ்ரா முடிவுகளையும் நம்பாமல், தனது முடிவுகளிலும் நம்பிக்கை இன்றி காணப்படுகிறார் சுப்மன் கில். ஆனால் ஹர்திக் பாண்டியா ஓய்வறை திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

காரணம் என்ன?

மாறாக ஹர்திக் பாண்டியா அந்த திட்டங்கள் சரியா என்பதை பற்றி கண்டு கொள்வதில்லை. இதுதான் ஹர்திக் பாண்டியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்து வருகிறது. குஜராத் அணிக்காக விளையாடிய போதும் கூட ஆஷிஷ் நெஹ்ரா முடிவுகளையும், கேரி கிறிஸ்டன் முடிவுகளையும் முழுமையாக நம்பினார். இதனால் இந்த ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.