ஏர்போர்ட்டை நெருங்கியபோது திடீரென 4 நிமிட அமைதி.! அஜித் பவார் விமானத்தின் பைலட் யார்?

மும்பை

ஏர்போர்ட்டை நெருங்கியபோது திடீரென 4 நிமிட அமைதி.! அஜித் பவார் விமானத்தின் பைலட் யார்?

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அஜித் பவார் சென்ற விமானம் இன்று விபத்தில் சிக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே விமானத்தை இயக்கியது யார்.. விமானம் விபத்தில் சிக்கியபோது என்ன நடந்தது உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இன்று காலை மகாராஷ்டிராவையே உலுக்கும் செய்தி வெளியானது. பாராமதி சென்ற மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவார் விமானம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் 66 வயதான அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். இதற்கிடையே விமான விபத்து தொடர்பாகச் சில முக்கிய தகவல்களை வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது

ஃப்ளைட்ரேடார் தகவல்களின்படி, விபத்தில் சிக்கியது Bombardier Learjet 45 (VT-SSK) ரக விமானமாகும். இது காலை 8:10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டுள்ளது. 8:30 மணியளவில் பாராமதியில் முதலில் தரையிறங்கும் முயன்ற நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.

4 நிமிட சைலன்ஸ்

இதையடுத்து விமானம் மீண்டும் காலை 8:42 மணியளவில் இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயன்றது. அதுவரை எல்லாமே சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆனால், 8:45 மணியளவில் அது ரேடாரில் இருந்து மறைந்தது. அடுத்த 4 நிமிடங்கள் விமானம் என்னவானது என்பது தெரியவில்லை. ரேடாரிலும் அது இல்லை. அதன் பிறகே பாராமதி விமான நிலைய ஓடுபாதை அருகே தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது தெரிய வந்தது.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "விமானம் தரையில் மோதிய உடனேயே வெடித்துச் சிதறியது.. ஓடுபாதைக்கு மிக அருகே விபத்து நடந்தது. ஓடுபாதை அடைய 100 மீட்டர் மட்டுமே இருந்த நிலையில், அது வெடித்துச் சிதறியது" என்றார். அங்கிருந்த வெளியான போட்டடோ வீடியோவில் விமானப் பாகங்கள் சுக்குநூறாகச் சிதறியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், விமானப் பாகங்கள் முழுவதும் சிதறிக் கிடந்தன.

பைலட் யார்

அஜித் பவாருடன் அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உட்பட 5 பேர் பயணித்துள்ளார். விமானத்தைத் தலைமை விமானி சுமித் கபூர் இயக்கியுள்ளார். மேலும், முதல் அதிகாரி சம்பவி பதக் என்பவர் இருந்துள்ளார்.. அவர்கள் அனைவருமே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 6 முதல் 8 பேர் அமரக்கூடியது. இது இந்தியாவின் பெரிய தனியார் சார்ட்டர் விமான நிறுவனங்களில் ஒன்றான டெல்லியைச் சேர்ந்த VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். 1990களில் 'சூப்பர்-லைட்' ஜெட் பிரிவில் உருவான இந்த மாடல், 2010இல் தயாரிக்கப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானம், அதன் வேகம், எரிபொருள் சிக்கனம், உயரமான இடங்களில் பறக்கும் திறனுக்காகப் புகழ்பெற்றது. 47 அடி இறக்கையுடன் கூடிய இந்த விமானம், குறுகிய மற்றும் நடுத்தரத் தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

முக்கிய தகவல்

லியர்ஜெட் விமானம் மணிக்கு 800-850 கி.மீ. வேகத்தில் 3,000 கி.மீ. வரம்பில் பறக்கும் திறன் கொண்டது. விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. எனினும், மோசமான வெளிச்சமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக VSR வென்ச்சர் தரப்பு கூறுகையில், "விமானம் 100% பாதுகாப்பானது. விமானக் குழுவினர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். மோசமான வெளிச்சமே இதற்குக் காரணம் இருக்கலாம்" என்றார். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த DGCA அதிகாரிகள், விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள், விமான டேட்டா மற்றும் காக்பிட் பதிவுகள் ஆகியவற்றைச் சேகரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர்.