முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர்.!

சிதம்பரம்

முதல்வர் ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர்.!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவர், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஆளுநரிடம் பட்டம் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் பட்டம் வழங்குவது எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் புகைப்படத்துடன் பட்டம் வாங்கிய மாணவர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 87 வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். அப்போது வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவரான விக்கிரவாண்டியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் ஆளுநர் பட்டம் வாங்கும்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பட்டம் வாங்கினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் வருவார் என எதிர்பார்த்தேன்

முதலமைச்சரின் புகைப்படத்துடன் பட்டம் வாங்கிய விக்கிரவாண்டியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவர் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவுப்படி முதலமைச்சர்தான் பல்கலைக்கழக வேந்தராக வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் பத்திரிகையில் ஆளுநரின் பெயர் இருந்தது. முதலமைச்சரின் திட்டங்கள் நன்றாக இருந்தது. அவருடைய ஸ்காலர்ஷிப் வாங்கிதான் நான் படித்தேன். அவருடைய பிரசன்ஸ் இங்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சரின் படத்தை வைத்து பட்டம் வாங்கினேன். வேறு ஒன்றும் இல்லை” என்றார்.

ஆளுநர் பட்டமளிப்பது பிடிக்கவில்லை

மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்று கூறப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆளுநர் பட்டமளிப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை. முதல்வரின் நல்ல திட்டங்களால் நான் பட்டப்படிப்பை முடித்து இன்று டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறேன். அதனால் அவருடைய பிரசன்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக புகைப்படத்தை வைத்து கொண்டு பட்டம் வாங்கினேன்” என்று கூறினார். இந்த மாணவரின் செயலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.