இலவச மின்சாரம், ஓய்வூதியம், ஆன்லைன் பட்டா, இலவச டிராக்டர் பயிற்சி - அரசின் 5 அப்டேட்டுகள் .!
சென்னை
தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு துறைகளின் கீழ் புதிய சலுகைகளையும், டிஜிட்டல் வழி சேவைகளையும் அறிவித்துள்ளது.
விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரச் சலுகை முதல் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த நில ஆவணங்கள் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், அத்திட்டங்களின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக பார்க்கலாம்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட் வரை இலவச மின்சாரம்
தமிழகத்தில் உள்ள விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கான இரு மாத இலவச மின்சார அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 750 அலகுகளாக இருந்த இலவச மின்சாரம், தற்போது 1,000 அலகுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1,000 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானிய விலையிலான கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் சுமார் 1,60,000 விசைத்தறி நெசவாளர்கள் நேரடியாகப் பயன்பெறுவர். இந்தத் திட்டம் மார்ச் 03, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஒருங்கிணைந்த நில ஆவணங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதி
நில உரிமையாளர்கள் தங்கள் நிலம் தொடர்பான சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் போன்ற ஆவணங்களைத் தனித்தனியாகப் பெறுவதில் இருந்த சிரமத்தைக் குறைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பொதுமக்கள் https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒரே ஆவணத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட வாரியாக, வட்டம் மற்றும் புல எண்ணை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் இதர அரசுத் தேவைகளுக்காக இந்த ஆவணத்தை எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்: தகுதிகள்
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகளுக்குத் தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இணைய விண்ணப்பதாரர் ஆதரவற்ற விதவையாக இருக்க வேண்டும் மற்றும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்குச் சொந்தமான அசையா சொத்தின் மதிப்பு ரூ. 1,00,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கடந்த ஜனவரி 31, 2026 நிலவரப்படி, மொத்தம் 6,36,292 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெற்று வருகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
இலவச டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி மற்றும் உரிமம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 18 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்கு இலவசமாக டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. 27 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் நவீன டிராக்டர் சிமுலேட்டர் (Simulator) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் (License) பெற்றுத் தரப்படும். வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு இயந்திரப் பணிமனைகளில் இந்தப் பயிற்சி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மீனவர் நல வாரியத் திட்டங்களில் டிஜிட்டல் மாற்றம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை எளிமையாக அணுக, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட முழுமையான டிஜிட்டல் இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது. பதிவு செய்த உறுப்பினர்கள் குறைந்தபட்ச ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் எஸ்எம்எஸ் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இது அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைக் குறைப்பதோடு, வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது.
