ராஜிய சபா எம்.பி -யா திணறிய திமுக.!
அரசியல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவில் இருக்கும் அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், ராஜ்யசபா எம்பி பதவி கேட்டு பேரம் பேசியதால் திமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக மட்டுமின்றி அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் என மூன்று கட்சிகளுடனும் பேரம் பேசிவருகிறாராம் காளியம்மாள்.
நாம் தமிழர் கட்சியில் அறியப்பட்ட பெண் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் காளியம்மாள். மீனவரான காளியம்மாள் அந்த மக்களிடையே தமக்கான தனித்த செல்வாக்கை அவ்வப்போது உருவாக்கி வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கேட்டு சீமானிடம் காளியம்மாள் மல்லு கட்ட அங்கேதான் பிரச்சனையே வெடிக்க தொடங்கியது. சீமானைப் பொறுத்தவரை மனைவி கயல்விழியை நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக்க விரும்பி இருந்தார்; அதனால்தான் பொதுச்செயலாளராக இருந்த தடா சந்திரசேகர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கயல்விழியை மேடையேற்றி அரசியல் பேசவும் வைத்தார் சீமான்.
ஆனால் தமது விருப்பத்துக்கே காளியம்மாள் உலை வைக்கிறார் என்பதால்தான் ஒரு கட்டத்தில் அவரை தட்டிவிட வேண்டிய பிசிறு என பகிரங்கமாக சீமான் பேசினார். இந்த ஆடியோ வெளியானது முதலே காளியம்மாளுக்கும் சீமானுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமானது.
சீமானும் பேட்டி ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்காகவே இப்படி மல்லுக்கட்டுகிறார் காளியம்மாள்; நாளை கட்சி பதவியை வாங்கிக் கொண்டு, நாதக பொதுச்செயலாளர் காளியம்மாள் வெளியேறினார் என செய்தி வருவதற்காகவா நான் பதவி தர வேண்டும் என்றெல்லாம் கொந்தளித்திருந்தார்.
இந்த நிலையில் காளியம்மாள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிற முடிவை எடுத்துவிட்டார்; சீமானும் காளியம்மாள் தாராளமாக வெளியேறிவிடலாம் என பகிரங்கமாகவே அறிவித்தும்விட்டார்.
தற்போதைய நிலையில் காளியம்மாள் தரப்பானது, திமுக- அதிமுக- தமிழக வெற்றிக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதில் திமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் காளியம்மாள் தரப்பு இரண்டு பேரங்களை முன்வைத்ததாம். அதில் ஒன்று 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும்; அது முடியாது எனில் தற்போது நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் எம்பியாக்க வேண்டும் என்பதுதானாம்.
காளியம்மாள் இந்த அதீத டிமாண்ட் திமுக் தலைமையையே ரொம்ப அதிர வைத்துவிட்டதாம். நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி வந்து திமுகவில் மாணவர் அணி தலைவராக இருக்கும் ராஜீவ் காந்தி போன்றவர்கள் ஒரு பக்கம் ராஜ்யசபா சீட் கிடைக்குமா? என எதிர்பார்க்கும் நிலையில் இன்று திடீரென காளியம்மாள் கட்சியில் இணைய ராஜ்யசபா எம்பி பதவியை பேரமாக கேட்பதுதான் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது என்கிற குமுறலையும் திமுகவினர் கொட்டி வருகின்றனர். என்னதான் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.