நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு சென்னை விமான நிலையத்தில் நடந்த சோகம்.!
நீலகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த அற்புத சகாயராஜ் (வயது 52) என்பவர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணிகளாக செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார்.
அவர் தனது குடும்பத்தினருடன் குடியுரிமை சோதனைக்காக தாய்லாந்து விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அற்புத சகாயராஜ், திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். இதனால் சக பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கடுமையான மாரடைப்பு காரணமாக அற்புத சகாயராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அற்புத சகாயராஜ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 3 பேரின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் ஏர் ஏசியா விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து பாங்காக் புறப்பட்டு சென்றது.
சென்னை விமான நிலைய போலீசார் அற்புத சகாயராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.