கடலூர் இளைஞரின் மரணத்தில் நடந்தது என்ன?
கடலூர்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள முரட்டு வாய்க்கால் பகுதியில் கடந்த நான்காம் தேதி இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். மருதூர் போலீசார் வாய்க்காலில் கிடந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் இரண்டு கால்களிலும் வெட்டப்பட்டது போன்ற காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். இதில், இறந்து கிடந்தவர் பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பதும் அவர் தனியார் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
ஒரு புறம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பாபுவின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாபு உடல் கிடந்த இடத்திற்கு கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தடயவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டார். காவல்துறையினருக்கு சம்பவம் நடைபெற்ற இடத்தில் எந்தவித தடயங்களும் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
இந்நிலையில், உயிரிழந்த பாபு கடைசியாக தனது மூன்று நண்பர்களான செல்வ கணபதி, செல்வகாந்தி, பிரவீன் ஆகிய மூவருடன் சென்றது தெரியவந்தது. மேலும், ஒன்றும் தெரியாதது போல் கிராம மக்களுடன் நின்று கொண்டிருந்த செல்வகாந்தி, செல்வகணபதி, பிரவீன் ஆகிய மூவரைப் பிடித்து புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இரவு முழுவதும் நடைபெற்ற கிடுக்குப் பிடி விசாரணையில் மூவரும் பகீர் தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்ற இரண்டு தினங்களுக்கு முன்பு செல்வகாந்தி, செல்வகணபதி, பிரவீன் ஆகிய மூவரும் மஞ்சக்கொல்லை முரட்டு வாய்க்கால் பகுதியில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் திருடியுள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து குத்துவிளக்கு, அன்னக்கூடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் திருடி விற்று மது அருந்தியுள்ளனர். மறுநாள் மீண்டும் தனது நண்பர் பாபுவை அழைத்துக்கொண்டு அதே வீட்டிற்கு செல்வகணபதி, செல்வகாந்தி, பிரவீன் ஆகியோர் திருடச் சென்றுள்ளனர். அப்போது செல்வராஜ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பாபு உயிரிழந்து விட்டார்.
பாபு உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தவர்கள், ஊருக்குள் சென்று ஒன்றும் தெரியாதது போல் இரண்டு நாட்களாக சுற்றி வந்துள்ளனர். பாபு மின்வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில் பயத்தில் நாங்கள் சென்று விட்டோம் எனவும் அதற்குப் பின்பு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது என மூவரும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் செல்வராஜை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தனது வீட்டில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வந்ததால் வீட்டைச் சுற்றி மின்வேலி அமைத்தேன் என்று செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலையில் பார்த்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாகவும், அவரின் உடலை அருகே இருந்த முரட்டு வாய்க்கால் பகுதியில் தூக்கி வீசிவிட்டேன் எனவும் காவல்துறையினரிடம் செல்வராஜ் கூறியுள்ளார். சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து இளைஞர் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததால், வீட்டின் உரிமையாளர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செல்வராஜ் வீட்டில் திருடியது தொடர்பாக செல்வகாந்தி, செல்வகணபதி, பிரவீன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிச் சென்ற குத்துவிளக்கு, அன்னக்கூடை உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதலும் செய்தனர். இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என்ற விசாரணையில், அவர் திருடச் சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.