டெபாசிட் இழந்தது நாதக.. கடந்த தேர்தலை விட 2 மடங்கு வாக்குகள் கிடைத்தது எப்படி? களம் சொல்வதென்ன?
ஈரோடு

கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
திமுக அபார வெற்றி; டெபாசிட்-க்கு போராடிய நாதக!
வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், 17 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 114439 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 23810 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அக்கட்சி வேட்பாளர் டெபாசிட் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நோட்டாவிற்கு 6040 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கில் நோட்டாவின் வாக்கு எண்ணிக்கை என்பது 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023 இடைத்தேர்தல் என இரு தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் அதிமுக, பாஜக என பிரதான கட்சிகளின் போட்டிகள் ஏதுமின்றி திமுகவை தனியாக எதிர்த்துக் களமிறங்கியது நாதக. இதன்காரணமாக அதிமுக மற்றும் பாஜகவின் வாக்குகள் பிரிந்து நாதகவுக்கும் கிடைக்குமெனவும், அக்கட்சி இதுவரை தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட அதிகம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில், கடந்த சில இடைத் தேர்தல்களில் வெற்றிபெறும் கட்சி 60 முதல் 65% வாக்குகளைப் பெற்றால், எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகள் 22 முதல் 28 சதவிகிதம் வாக்குகளைப் பெறும்.
ஈரோடு கிழக்கு - 2021 சட்டமன்ற தேர்தல் முடிவு சொல்வதென்ன?
2021 சட்டமன்ற தேர்தலில் - ஈரோடு கிழக்கில் - நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்தத் தொகுதியில் அதன் வாக்கு சதவீதம் 7.7 ஆக இருந்தது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் 67,300 வாக்குகளையும், அதிமுக கூட்டணி வேட்பாளர் 58,396 வாக்குகளையும் பெற்றிருந்தனர். திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 44.7 ஆகவும், அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 38.8 ஆகவும் இருந்தது. இதைத்தாண்டி களத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இருந்தன.
நாதகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தது எப்படி?
கடந்த இரு இடைத்தேர்தல்களில் 60 முதல் 65% வாக்குகள் ஆளும் தரப்புக்குக் கிடைத்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சிக்கு 25 முதல் 29% வாக்குகள் கிடைத்திருந்தன. நாதகவைப் பொருத்தவை 5 முதல் 7% வாக்குகளைப் பெற்றிருந்தது.
ஆனால், இந்த தேர்தலில் இருமுனைப் போட்டியாக இருந்ததினால் பிரதான எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறி நாதகவிற்கும், ஆளும் தரப்புக்கும் பிரிந்து சென்றுள்ளது. அதனால், திமுக கூடுதலாக 11 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. அதனால், 75 சதவீத வாக்குகளுடன் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அதேவேளையில், நாதகவை பொறுத்தவரை கடந்த தேர்தலைவிட 9 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று 15 சதவீத வாக்குகளுடன் தன்னுடைய உச்சத்தை எட்டியுள்ளது. திமுகவுக்கு வாக்கே செலுத்தாத தரப்பினர் நாதகவுக்கு வாக்களித்திருக்க வாய்ப்புள்ளது.