கஞ்சா செடி வளர்த்த வட மாநில இளைஞர்கள்.! கைது செய்த காவல் துறை.!
குற்றம்

தூத்துக்குடியில் தங்கி இருந்த இடத்தில் கஞ்சா செடி வளர்த்த பீகார் மாநில இளைஞர்கள் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள மடத்தூர் பகுதியில் தனியார் உப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உப்பு பண்டல் போடுவதற்காக வட மாநில இளைஞர்கள், அதே நிறுவன வளாகத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அந்த நிறுவன வளாகத்தில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தினர். அங்கு, வடமாநில இளைஞர்கள் தங்கியிருந்த பகுதியில் சுமார் இரண்டரை அடி உயர கஞ்சா செடி வளர்ந்து நின்றது.
உடனடியாக போலீஸார் அந்த செடியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அங்கு தங்கியிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ் ஷா (28), முன்னா தேவன் (29), சதீஷ் குமார் (19), பிஜியாலி பாஸ்வான் (29) ஆகிய 4 பேரும் கஞ்சா செடியை வளர்த்து வந்ததும், அதனை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது, 80 கிராம் கஞ்சா, கஞ்சா புகைப்பதற்கான 2 குழாய்கள், தடை செய்யப்பட்ட 40 புகையிலை பாக்கெட்டுகள், 4 செல்போன்கள் இருந்தன. அதனை போலீஸார் கைப்பற்றினர். இது குறித்து, சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.