வீட்டு கடன் வாங்கும்போது இன்சூரன்ஸ் செய்திருந்தால் இத்தகவலை படிக்கவும்.!
கோவை

கோவை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த ஆறுசாமி, கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறுகையில், கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள தனியார் வங்கியில் என்னுடைய மனைவி பழனியம்மாள் பெயரில் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் வீட்டு கடன் பெற்று இருந்தோம். இதற்காக புனேவை தலைமையிடமாக கொண்ட ஒரு காப்பீடு நிறுவனத்தில் ரூ.12 ஆயிரத்து 853 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்திருந்தோம்.
ஆனால் என்னுடைய மனைவி பழனியம்மாள் உடல் நலக்குறைவால் கடந்த 2022-ம் ஆண்டு இறந்து போனார். 10 வயது மகள் மட்டும் எங்களுக்கு வாரிசாக இருக்கிறார். கடன் வாங்கும்போது காப்பீடு செய்தால் குடும்பத்துக்கு பாதுகாப்பு என்றும், ஆபத்து கால இழப்பீடு உள்ளிட்டவை கிடைக்கும் என்று கூறியதால் கடனுக்கு காப்பீடு பெற்றிருந்தோம்.
ஆகவே நாங்கள் என் மனைவியின் மரணம் குறித்து முறைப்படி கடன் பெற்ற வங்கிக்கு தெரிவித்திருந்தோம். ஆனால் எங்களுக்கு 4-வது பட்டுவாடா தொகையை வழங்காமல் வங்கி நிர்வாகத்தினர் முடக்கினர். மேலும் கணக்கை முடக்காமல் தங்களுடைய அசல் மற்றும் அசலுக்கான வட்டியை கழித்துக் கொண்டே வந்தனர். எனவே காப்பீடு மற்றும் உரிய விதிமுறை பின்பற்றவில்லை. உரிய இழப்பீடு வழங்குவதுடன், பத்திரத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் மரணம் அடைந்த பழனியம்மாளின் வீட்டு கடனுக்கான பாக்கி தொகையை அவர் மரணம் அடைந்த தேதி முதல் இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும்.
வங்கி நிர்வாகம் வங்கி கடனை முடித்து கடனுக்கு ஈடாக பெறப்பட்ட வீட்டு பத்திரத்தை திரும்ப வழங்க வேண்டும்,
இருதரப்பினரும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.30 ஆயிரமும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டனர்.
மேட்டுப்பாளையம் Rafi ( MR )