மகன் இறந்த சோகம் தாங்காமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை. !

திருப்பூர்

மகன் இறந்த சோகம் தாங்காமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை. !

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் பனியன் நிறுவன தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அங்காள ஈஸ்வரிக்கு 25 வயது ஆகிறது. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 4 மாதத்திலேயே உடல்நிலை சரியில்லாததால், அந்த குழந்தை இறந்து விட்டது.

இதனால் ரமேஷ் மற்றும் அங்காள ஈஸ்வரி ஆகியோர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ரமேஷ் மற்றும் அங்காள பரமேஸ்வரி தம்பதி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு குடிபெயர முடிவு செய்தனர். இதன்படியே திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்துக்கு குடிபெயர்ந்தனா். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரமேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவம் நடந்த நேற்று முன்தினம், ரமேஷ் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு போய் விட்டார். வீட்டில் அங்காள ஈஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர், குழந்தையை பறிகொடுத்த சோகத்தை நினைத்தபடியே இருந்ததாக தெரிகிறது. திடீரென அங்காள ஈஸ்வரி, வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டார்.

இதைப்பார்த்த அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்காள ஈஸ்வரியை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அங்காள ஈஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்க்கையை முடித்துக் கொண்ட அங்காள ஈஸ்வரிக்கு, திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)