திருப்பூரில் சோதனை நடத்த வந்த உணவு பாதுகாப்பு துறை ஆபிஸர். ! இடியாப்ப சிக்கலில்

Tirupur

திருப்பூரில் சோதனை நடத்த வந்த உணவு பாதுகாப்பு துறை ஆபிஸர். ! இடியாப்ப சிக்கலில்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், பெருமாநல்லூர் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி வந்த சுரேஷ்குமார் என்பவர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் ஏதாவது இருக்கிறதா? உங்கள் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். பின்னர் மளிகைக் கடையில் செய்த வேலையால் கம்பி எண்ணி வருகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்துவார்கள்.. அப்படி சோதனை நடத்தும் அதிகாரிகள் அபராதம் விதிப்பார்கள்.. சில நேரங்களில் கடைகளில் உணவு பொருட்கள் மோசமாக இருந்தால் சீல் வைப்பு நடவடிக்கையும் எடுப்பார்கள். ஆனால் அதிகாரிகள் பெயரில் சிலர் மோசடி செய்வதும் நடக்கிறது. அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் நடந்ததை பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சித்தாண்டிபாளையம் பகுதியில் 60 வயதாகும் சக்திவேல் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று சக்திவேல் தனது மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் தன்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறியிருக்கிறார்.

பின்னர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி என்று கூறிய நபர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் ஏதாவது இருக்கிறதா? என்று உங்கள் கடையை சோதனை செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளார் அத்துடன் கடையில் சோதனையிடுவது போல, உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கூறியிருக்கிறார்

இதை உண்மை என்று நம்பிய கடைக்காரர் சக்திவேல், கடைக்குள் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை வெளியே எடுத்து வைக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த இளைஞர் கடையில் கல்லாபெட்டியில் இருந்த ரூ.9 ஆயிரத்தை திடிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார். இதனால் அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சக்திவேல் சுதாரித்தார். உடனடியாக அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து வைத்துக் கொண்டார்.

அதன்பின்னர் சக்திவேல் குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், குன்னத்தூர் போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோவை பீளமேடு, காந்திமா நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் சுரேஷ்குமார் (27) என்பது தெரியவந்தது. இவர் இதுபோல் குன்னத்தூரிலும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சூலூர், பல்லடம் போலீஸ் நிலையங்களில் சில திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.