உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு.!

திருப்பூர்

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு.!

சாதி மறுப்பு திருமணம் என்பது கடந்த காலங்களை ஒப்பிடும்போது அதிக அளவில் நடந்து வருகிறது. சாதிமத பேதம் இல்லாத சமூகத்தை உருவாக்க கூடிய காரணிகளில் காதல் திருமணங்களும் ஒன்று என்பது மறக்க முடியாத உண்மை.

ஆனால் மறுபுறம் பார்த்தால் சாதியும் மதமும் சமூகத்தின் மீது தனது சாட்டையை அவ்வப்போது வீசி வலி கொடுத்து தான் வருகிறது. இந்த இரண்டு சக்திகளுக்கும் ஆசையாக திருமணம் செய்தவர்கள், காதலிப்பவர்கள் இரையாகி வருவதும் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் உடுமலைப்பேட்டை சங்கர் கொலை நிகழ்வாகும். 2016 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தமிழகமே ஊடகங்கள் மூலம் ஒரு வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறது. பட்டப் பகலில் கடைவீதிகள் அதிகம் உள்ள இடத்தில் ஒரு கும்பல் ஒரு இளம் பெண்ணையும், ஆணையும் சரமாரியாக வெட்டி கொல்ல முயற்சிக்கும் காட்சிகள் தான் அவை. அதைக் கண்டு தமிழகமே நடுங்கியது என்று சொல்லலாம்.

எதிரியாக வந்த சாதி

இதில் அந்த இளைஞர் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சமூக இடத்திலேயே துடிதுடித்து பலியானார். அந்தப் பெண் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு மிகப்பெரிய சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். இந்த சம்பவத்தில் சாதி எந்த அளவுக்கு கொடூரமாக இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேலுசாமி என்பவரின் 22 வயதான மகன் சங்கரு திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கௌசல்யாவும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு கௌசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கௌசல்யா ஒரு பட்டியலின இளைஞரை எப்படி காதலிக்கலாம் என வீட்டில் பிரச்சனை மேல் பிரச்சனை வெடித்தது. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி சங்கர்தான் வேண்டும் என கௌசல்யா 2016 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிறார். புதிதாக வாழ்வை தொடங்கியவர்கள் தேவைப்படும் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்த நிலையில் அங்குதான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருந்தது.

சங்கருக்கு நீதி கேட்டு போராட்டம்

கௌசல்யா படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மே 12ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார். சங்கரின் குடும்பத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து தான் எடுத்த முடிவு தவறு என்றும் சங்கரின் கொலைக்கு நீதி பெறுவதிலும் கௌசல்யா உறுதியாக இருந்தார். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மணிகண்டன், மைக்கேல், செல்வகுமார், ஜெகதீசன், தன்ராஜ், பிரசன்ன குமார், கலைவாணன், மணிகண்டன் என்ற கூலிப்படை கும்பல் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 11 பேரில் 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சங்கர் கௌசல்யா மீதான தாக்குதல் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலமாகவும், கௌசல்யா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்ட அனைவர்கள் மீதும் குற்றமானது தகுந்த ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

சம்பவம் நடந்த இடத்தில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி இல்லை. ஆனால் கூலிப்படைக்கு பணம் கொடுத்தது தொடங்கி அவர்களுக்கு ரூம் போட்டு கொடுத்தது வரை அவர் தான் பின்னணியில் இருந்தார் என்பது செல்போன் உரையாடல்கள் மூலம் கண்டறியப்பட்டது. மிகவும் வேகமாக நடந்த இந்த விசாரணையில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையானது மூன்று மாதங்களில் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வழக்கில் விசாரணை முழுவதுமாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டு டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னகுமார் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்தனர். மீதமுள்ள தந்தை சின்னசாமி உட்பட எட்டு பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இதில் தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதே சமயம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஐந்து பேர் என ஆறு பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. முழுக்க முழுக்க சாதிய வன்மத்தால் நிகழ்த்தப்பட்ட கொலைக்கு பின்னணியில் ஒரு கூட்டமே ஆதரவாக இருந்தது என்பது பலரின் பேச்சாக இருந்தது. அன்னலட்சுமி உட்பட 3 பேரும் விடுதலை எதிர்த்து அரசு தரப்பிலும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டை போட்டவர்கள் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மூன்றாண்டுகள் நடைபெற்ற வழக்கின் விசாரணை ஜூன் 22ஆம் தேதி முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. சின்னசாமியை குற்றவாளியாக கருத தகுந்த ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. மற்ற ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றிருந்த தன்ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் அல்லது சுதந்திரமாக வெளியில் தெரிந்தாலும் இழப்பு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கான வலியாக மட்டும்தான் மாறும். அதில் சங்கரின் இழப்பு என்பது சமூகத்தின் மீதான காயமாகும்.