உதவி கலெக்டர் என பொய் கூறி திருமணம் செய்த பெண் கைது.! மேலும் யாரையும் ஏமாற்றியுள்ளாரா என விசாரணை.!
கோவை

நாமக்கல்லைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு நாமக்கல்லை சேர்ந்த தன்வர்த்தினி என்ற பெண்ணை திருமணத்திற்காக பார்த்துள்ளனர். அவர் பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருவதாக பெற்றோர் கூறியிருக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகே அது பொய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து நாமக்கல் வங்கி அதிகாரியை மோசடி செய்து ஏமாற்றிய போலி உதவி கலெக்டர் கைதானார்.
ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்று அந்த காலத்தில் சொல்வார்கள்.. ஒரே ஒரு பொய் சொல்லி திருமணம் செய்திருக்கிறார் ஒரு பெண்.. ஆனால் சொன்ன பொய், கொஞ்சம் வில்லங்கமான பொய்.. அதனால் இப்போது கைதாகி உள்ளார். நாமக்கல்லில் வங்கி அதிகாரியை, உதவி கலெக்டர் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் பெண் ஒருவர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியை சேர்ந்த 29 வயதாகும் நவீன்குமார் என்பவர் கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாமக்கல் ராமாபுரம் புதூரை சேர்ந்த தன்வர்த்தினியுடன் திருமணம் நடந்துள்ளது.
நாமக்கல் வங்கி அதிகாரி
திருமணத்திற்கு பெண் பார்த்தபோது தன்வர்த்தினி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருவதாக நவீன்குமாரின் பெற்றோரிடம் கூறியிருந்தார்களாம். போலி உதவி கலெக்டர் தன்வர்த்தினியின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் மற்றும் நுனி நாக்கில் பேசிய ஆங்கிலத்தால் வங்கி அதிகாரி நவீன்குமாரின் குடும்பம் எந்த விசாரணையும் செய்யாமல் உண்மை என்று நம்பியது. திருமணத்திற்கு பிறகே தன்வர்த்தினி உதவி கலெக்டர் இல்லை என்பது நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
உதவி கலெக்டர் என்று பொய்
இதுகுறித்து நவீன்குமார் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி உதவி கலெக்டர் தன்வர்த்தினியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கைது செய்யப்பட்ட போலி உதவி கலெக்டர் தன்வர்த்தினி வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லேப்டாப் பறிமுதல்
இதுபற்றி போலீசார் கூறும் போது, போலி உதவி கலெக்டர் தன்வர்த்தினியின் பொள்ளாச்சி வீட்டிற்கு சென்று சோதனை செய்தோம். அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதை ஆய்வுக்கு உட்படுத்த இருக்கிறோம். மேலும் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். அதோடு தன்வர்த்தினிக்கு போலி அடையாள அட்டையை தயாரித்து கொடுத்தது யார்? வேறு யாரேனும் அவருக்கு உதவி உள்ளனரா? என்று விசாரித்து வருகிறோம் என்றனர் காவல் துறையினர்.