ராமதாஸ் சொல்லி தான் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தோம். ! வயது முதிர்வு காரணமாக குழந்தையாக மாறி விட்டார் ராமதாஸ் என அன்புமணி விளக்கம்.!

பா.ம.க.

ராமதாஸ் சொல்லி தான் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தோம். ! வயது முதிர்வு காரணமாக குழந்தையாக மாறி விட்டார் ராமதாஸ் என அன்புமணி விளக்கம்.!

சென்னை: எனது மனைவி செளமியாவை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாமக செயல் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராமதாஸ் கூறியதால் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாக கூறிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் ஒரு குழந்தை போல் மாறிவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்த உச்சத்திற்கு சென்றுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்ததற்கு அன்புமணி தான் காரணம் என்று ராமதாஸ் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துவிடுவேன் என்று அன்புமணி சொன்னதாக தெரிவித்தார்.

ராமதாஸ் குற்றச்சாட்டு

அதேபோல், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அன்புமணி ஒரு காலினையும், செளமியா ஒரு காலினையும் பிடித்து கெஞ்சியதாக கூறிய ராமதாஸ், கூட்டணி பேச்சுவார்த்தையை செளமியா முடித்து அடுத்த நாளிலேயே அண்ணாமலை உள்ளிட்டோரை அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். அதேபோல் பாமக தலைவராக அன்புமணியை கொண்டு வரவும் செளமியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

அன்புமணி ஆதங்கம்

ராமதாஸ் முன் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் பாமக சார்பாக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே இல்லை.

12 ஆண்டுகளுக்கு முன்

ராமதாஸ், ராமதாஸாக இருந்து எது சொல்லி இருந்தாலும், கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். அதனால் சோசியல் மீடியாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். ஆனால் ராமதாஸுக்கு பிறகு தான் நான் தலைவராக வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.

பாஜக கூட்டணி

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ், ராமதாஸாக இல்லை. அதனால் தான் தலைவர் பதவியை ஏற்றேன். கடந்த 5 ஆண்டுகளில் வயது முதிர்வு காரணமாக ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். ராமதாஸ் உடன் இருக்கும் 3 பேர் தங்களின் சுய லாபத்திற்காக பாமக நிறுவனர் ராமதாஸை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதேபோல் 2024 லோக்சபா தேர்தலில் ராமதாஸ் கூறியதால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்.

சிவி சண்முகம் வந்தது ஏன்?

அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்ல போகிறேன். சிவி சண்முகம் 2 முறை வந்த போதும், நான் எதற்காக வந்தார் என்று கேட்டேன். அதற்கு ராமதாஸ், அவர் அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என்று பதில் அளித்தார். ஆனால் கூட்டணி பேசியதாக பின்னர்தான் தெரிய வந்தது.

செளமியா அன்புமணி விவகாரம்

அதேபோல் என்னுடைய மனைவி செளமியாவை பற்றி தவறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் உயர்ந்த பதவியில், பொறுப்பில் இருக்கிறார். மிகவும் படித்தவர். அவரை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அன்புமணியின் இந்த பேச்சு பாமகவின் மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.