ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது.." ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி.!
விசிக Vs த வெ க
சென்னை: திமுக மிரட்டல் காரணமாகத்தான், ரஜினி அரசியலுக்குள் வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார்.
இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினியை மிரட்டியது திமுகதான் என்று கூறியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?
அவர் பேசியதாவது, "எம்ஜிஆருக்கு பின்னர், ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பியவர்தான் ரஜினி. தமிழக அரசியல் களத்திற்கு வந்து, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது.
மாற்றம் வேண்டும்
அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கரூர் சம்பவத்துக்குப் பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என விஜய் பயணிக்கிறார்" என்று பேசியிருந்தார்.
வாய்ப்பே இல்லை
இதற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்திருக்கிறார். "இது ஆதாரமில்லாத கருத்து. அவர் எந்த அடிப்படையில் இதை சொல்லியிருக்கிறார் என தெரியவில்லை. ரஜினிகாந்த், பதவி, அதிகாரம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர் அல்ல. அவர் அந்த நிலையிலிருந்து முற்றிலும் விலகி நிற்பவர். முதிர்ச்சியடைந்தவர். எனவே, அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சி தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை" என்று கூறியிருக்கிறார்.
மிரட்டலுக்கு அஞ்சி கிடையாது
முன்னதாக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை வெளியாகியிருந்தது. அதில், "ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல: தனது பலத்தை நிருபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும். பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர். #பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி" என விமர்சிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
