அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.260 கோடி இழப்பீடு .!

அமெரிக்கா

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.260 கோடி இழப்பீடு .!

வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அந்நாட்டு போலீசாரின் கார் மோதி இந்தியாவைச் சேர்ந்த மாணவி உயிரிழந்த ஜானவி விவகாரத்தில், அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.260 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜானவி கண்டுலா என்ற மாணவி, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, மிக அதிவேகமாக வந்த ஒரு போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜானவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் வாகனங்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில், காவல் அதிகாரி கெவின் டேவ் தனது வாகனத்தை மணிக்கு 119 கி.மீ வேகத்தில் அசுரவேகமாக ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், விபத்து நடந்த பிறகு மற்றொரு காவல் அதிகாரியான டேனியல் ஆடரர் என்பவர் தனது உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான உரையாடலின் போது, இந்திய மாணவி ஜான்வியின் இறப்பைக் கிண்டல் செய்யும் விதமாகச் சிரித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. ஜான்வியின் உயிருக்கு மதிப்பில்லை என்றும், வெறும் 11,000 டாலர்கள் செக் எழுதி கொடுத்தால் போதுமானது என்றும் அவர் ஏளனமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்திற்குக் காரணமான காவல் அதிகாரி கெவின் டேவ் மற்றும் மாணவியின் மரணத்தை ஏளனம் செய்த டேனியல் ஆடரர் ஆகிய இருவரும் காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தை ஓட்டியவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் 5 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே, போலீஸ் அதிகாரி மீதும், நகர நிர்வாகம் மீதும் 2004 ல் 110 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜான்வி ஒரு புத்திசாலி மாணவி என்றும், அவரது எதிர்காலம் மிகக் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மற்றும் நகர வழக்கறிஞர் அலுவலகம், தற்போது 29 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. அதாவது, ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தொகையில் பெரும் பகுதியை சியாட்டில் நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என்றும், மீதமுள்ள தொகையைச் சியாட்டில் மாநகராட்சி நேரடியாக வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சியாட்டில் நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ், ஜானவி கண்டுலாவின் மரணம் மிகவும் வருத்தத்துக்கு உரியது. அவரது உயிர் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மற்றும் சமூகத்திற்கும் மிகவும் முக்கியமானது என்பதைத் நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்த நிதி உதவி மாணவியின் குடும்பத்திற்கு ஒரு சிறிய ஆறுதலாகவும், அவர்களின் துயரத்திலிருந்து மீண்டு வர உதவியாகவும் இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார். உயிரிழந்த ஜான்விக்கு அவர் பயின்ற பல்கலைக்கழகம் கௌரவ முதுகலைப் பட்டம் வழங்கி சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.