200 - 300 பேருடன் வந்தால் பயந்து விடுவோமா என பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ வை காட்டமாக கேள்வி கேட்ட நீதிமன்றம். !
சென்னை

கட்டப் பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து சட்டப் பேரவைக்கு அனுப்பி வைத்தார்கள். 200 - 300 கோர்ட்டுக்கு பேருடன் வந்தால் பயந்து விடுவோமா என காட்டமாக கேள்வி கேட்ட நீதிபதி.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார். தொடர்ந்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி ஜெயராமனின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக முறையிட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமனுக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜர் ஆனார்.
விசாரணையின்போது, கட்டப் பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், "200-300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள்.
உங்களைத் தவறாக பயன்படுத்தி இருந்தால் நீங்கள் காவல்துறையை அழைத்து இருக்க வேண்டும். உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரை தவறாக பயன்படுத்தினாலும் குற்றம் தான். விசாரணைக்கு தனியாகத்தான் போக வேண்டும்" என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி.
மேலும், சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யவும், உனடியாக அவரை சிறையில் அடைக்கவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனு ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.