அகமதாபாத் விமான விபத்து துணை விமானியால் கூட நடந்திருக்கலாம் -ரியான் போடன் ஹெய்மர்
ஏர் இந்தியா

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு துணை விமானியின் தவறாக இருக்கலாம் என முன்னாள் முன்னாள் விமானப்படை விமானி ரியான் போடன் ஹெய்மர் தெரிவித்துள்ளார்.
போயிங் 737 மற்றும் ஏர்பஸ் 320 விமானங்களையும் இயக்கிய நீண்ட அனுபவம் கொண்ட அவர், விமானம் புறப்பட்ட உடனேயே எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
விபத்துக்கு காரணம் என்ன?
விமானம் புறப்படும்போது, தரையிறங்கும் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட வேண்டும். இறக்கையில் இருக்கும் ஃபிளாப்ஸ் எனப்படும் அமைப்புகள் விரிந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டும். விமானம் மேலே எழும்பி சில நொடிகளில் "கியர் அப்" என்று விமானி கூறுவார். அதன்படி, துணை விமானி ஒரு லீவரை இழுத்து தரையிறங்கும் சக்கரங்களை உள்ளே இழுக்க வேண்டும்.
அதாவது லேண்டிங் கியரை உள்ளே இழுக்க வேண்டும் . ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் துணை விமானி தவறுதலாக கியருக்கு பதிலாக ஃபிளாப்ஸை உள்ளே இழுத்திருக்கலாம்.. அதாவது ஃபிளாப்ஸை மேலே இழுத்திருக்கலாம். ஃபிளாப்ஸ் கீழே இருந்தால்தான் விமானம் மேல் நோக்கி செல்லும், ஃபிளாப்ஸ் மேலே இருந்தால் அல்லது டேக் ஆப் செய்யும் போது சமமாக இருந்தால் விமானம் கீழ் நோக்கி செல்லும், என்று போடன்ஹெய்மர் கூறி உள்ளார்.
மேக்ஸ் ஆப்டர் பர்னர் என்ற போட்காஸ்ட்டை நடத்தும் போடன்ஹெய்மர், விமானம் புறப்பட்டு 30 வினாடிகளுக்குப் பிறகும் தரையிறங்கும் சக்கரங்கள் வெளியே இருந்ததையும், ஃபிளாப்ஸ் உள்ளே இழுக்கப்பட்டதால் இறக்கைகள் சமமாக இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார். இதனால் துணை விமானி செய்த தவறாக இருந்திருக்கலாம்.. அல்லது ஃபிளாப்ஸ் செயல்படாமல் மேல் நோக்கி சென்று இருக்கலாம் என்று கூறி உள்ளார் .
பெரிய குறைபாடு
இதுகுறித்து பேசிய போடன்ஹெய்மர், "ஃபிளாப்ஸ் விரிந்த நிலையில் இருந்திருந்தால், என்ஜின்கள் வெளியே தெரியாது. தவறை உணர்ந்து சரி செய்வதற்குள் நேரம் கடந்து போயிருக்கும்" என்றார். போயிங் 787 ட்ரீம்லைனர் போன்ற நவீன விமானத்தில், ஃபிளாப்ஸ் உள்ளே இழுக்கப்பட்டிருந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஒலி எழுப்பப்படவில்லை என்றால் அது மிகப்பெரிய குறைபாடு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இருப்பினும், பறவைகள் என்ஜினில் அடிப்பதாலோ அல்லது எரிபொருள் கலப்படமாக இருந்தாலோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அவர் மறுக்கவில்லை. விமானம் பராமரிப்பு முடிந்து வந்ததால், பராமரிப்பில் ஏதேனும் தவறு நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அது சாத்தியம் குறைவானது என்றும் அவர் கூறுகிறார்.
ஏர் இந்தியா விமானம் விபத்து
விபத்து நடந்த இடம் ஓடுபாதையிலிருந்து நேர்கோட்டில் இருந்ததால், இரண்டு என்ஜின்களிலும் பிரச்னை இருந்திருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். ஒரு என்ஜின் பாதிக்கப்பட்டிருந்தால், விமானம் இடது அல்லது வலது பக்கம் திரும்பியிருக்கும். இரண்டு என்ஜின்களிலும் பறவைகள் அடிப்பதால் இவ்வாறு பாதிப்புகள் நடக்க வாய்ப்புள்ளது.
வான்வழிப் பயணம் மிகவும் பாதுகாப்பானது என்றும், மக்கள் விமானப் பயணத்தை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் போடன்ஹெய்மர் தனது போட்காஸ்டில் வலியுறுத்துகிறார். இவரது போட்காஸ்ட் விமானங்கள் மற்றும் விமானப் பயணங்கள் குறித்த தொழில்நுட்ப விவரங்களுக்கு பெயர் பெற்றது.