ஏர் இந்தியா விமானம் கோளாறு காரணமாக புறப்பட்ட 90 நிமிடங்களில் ஹாங்காங்கில் மீண்டும் தரையிறக்கம். !
ஏர் இந்தியா

ஹாங்காங்கில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏ ஐ 315 தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட 90 நிமிடங்களில் மீண்டும் ஹாங்காங்கிற்கே திரும்பியது.
இதற்கிடையே இந்த பயணத்தின் போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் விமானி பேசியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி இந்திய ஏவியேஷன் வரலாற்றில் மோசமான நாட்களில் ஒன்று. அன்று குஜராத்தில் இருந்து லண்டனுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் அது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.
ஏர் இந்தியா
இந்தச் சம்பவம் ஏர் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா விமானங்களை விரிவான சோதனைக்கு உள்ளாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி முடிவதற்கு உள்ளாகவே மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லிக்கு வரவிருந்த ஏர் இந்தியா விமானம் ஹாங்காங்கிற்குத் திரும்பியது. இதற்கிடையே விமானத்தை மீண்டும் ஹாங்காங்கிற்கு திரும்பும் முன்பு பைலட் பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. விமானிகள் பயணத்தைத் தொடர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதே மாடல்
ஏர் இந்தியா விமானம் ஏஐ 315 திங்கள்கிழமை காலை ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இதுவும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமாகும். இதே மாடல் விமானம் தான் கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
பரபர ஆடியோ
விமானிக்கும், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான உரையாடல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் விமானி, "நாங்கள் பயணத்தைத் தொடர விரும்பவில்லை, விமான நிலையத்திற்குத் திரும்புகிறோம்" என்று சொல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. விமானத்தில் ஏதோ பெரிய சிக்கல் இருப்பதை உணர்ந்தே விமானி மீண்டும் ஹாங்காங்கிற்கு திருப்பியது போலவே இந்த உரையாடல் இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஹாங்காங்-டெல்லி இடையே இயக்கப்படும் இந்த ஏர் இந்தியா விமானம் காலை 9.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில், 90 நிமிடங்களில் அது மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பியது. Flightradar24 இணையதளத்தில் உள்ள டேட்டாவில் இது தெளிவாகவே தெரிகிறது.
ஏர் இந்தியா சொல்வது என்ன!
இது தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஜூன் 16ம் தேதி ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏஐ315 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹாங்காங்கிற்குத் திரும்பியது. விமானம் பாதுகாப்பாக ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.. பயணிகளை விரைவில் டெல்லிக்கு அழைத்து வர மாற்று ஏற்பாடுகள் வருகிறது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்" என்றார்.
தொடரும் சர்ச்சை
ஏர் இந்தியா விமானம் ஏஐ 171 விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஜெட் விமானம் இதுபோல சர்ச்சையில் சிக்குவது இது இரண்டாவது சம்பவமாகும். முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை, லண்டனில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் ட்ரீம்லைனர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் லண்டனுக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.