அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரன் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.! தண்டனை விபரம் விரைவில்.!
அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பைக் கேட்டவுடன் ஞானசேகரன் தனது கைக்குட்டையை வைத்துக் கொண்டு கதறி அழுததாகவும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களே அவரை சமாதானப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி சக மாணவருடன் அமர்ந்து பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், இருவரையும் மிரட்டியுள்ளார். மேலும், அந்த மாணவரை விரட்டிவிட்டு, மாணவியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
ஞானசேகரன்
இது தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. வெறும் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் அவர் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையே நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது ஞானசேகரன் என்ன செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கதறி அழுத ஞானசேகரன்
அதாவது ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்த போது, அதே கேட்டவுடன் ஞானசேகரன் கதறி அழுதுள்ளார். தனது கைக்குட்டையைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுததாகக் கூறப்படுகிறது. அவரது சார்பில் அரசு நியமித்த வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில், அவர்களே ஞானசேகரனை சமாதானம் செய்துள்ளனர்.
அதன் பிறகே நீதிபதியிடம் தனக்குத் தண்டனையைக் குறைத்து வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருப்பதாகவும் தந்தையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்மா, சகோதரி மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இதற்கு போலீஸ் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஞானசேகரின் தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2ம் தேதி, அதாவது வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.