ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சி பதவி பறிப்பு.! மேலும் ஒரு குண்டாஸ். !

குற்றம்

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சி பதவி பறிப்பு.! மேலும் ஒரு குண்டாஸ். !

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் என்ற மிளகாய்ப்பொடி வெங்கடேசன்.

இவர் தமிழக பாஜகவில் மாநில ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

மிளகாய் பொடி வெங்கடேஷ்

கடந்த 8ம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷ் பொன்னாடை போர்த்தி வரவேற்ற புகைப்படங்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஆந்திர காவல்துறை, தமிழக காவல்துறை, தெலங்கானா காவல்துறை மற்றும் அரசியல் தலைவர்கள் என பலருக்கு டேக் செய்திருந்தார். இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் பேனாசோனிக் டீலர் தீபன் சக்கரவர்த்தி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். எலட்ரிக்கல்ஸ் கடைக்கு வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், செங்குன்றம் போலீசாரால் மிளகாய் பொடி வெங்கடேசன் கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஜகவில் இருந்து நீக்கம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த K.R.வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் KR வெங்கடேசன் என்ற மிளகாய்ப்பொடி வெங்கடேசன் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளியான KR வெங்கடேசன்

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஆவடி காவல் ஆணையகரத்திற்குட்பட்ட, செங்குன்றம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான KR வெங்கடேசன் என்ற மிளகாய்ப்பொடி வெங்கடேசன் என்பவர் மீது, ஆவடி காவல் ஆணையகரத்தில் 05 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் 49 வழக்குகளும் உள்ள நிலையில், கடந்த ஜூன் 12ம் தேதியன்று, முகலிவாக்கம் குமுதம் நகரைச்சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (41) என்பவர், தனக்கு கணபதிலால் என்பவர் தர வேண்டிய ரூ.87,82,586 திருப்பி தரமால் ஏமாற்றியதற்காகவும், அதனை பெற்றுத்தருவதாக கூறி KR வெங்கடேசன் என்ற மிளகாய்ப்பொடி வெங்கடேசன் தன்னை மிரட்டி ரூ,1 லட்சம் முன்பணமாக வாங்கியதாகவும், மேலும் 12 லட்சம் கேட்டு மிரட்டியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புலன் விசாரணையின் தொடர்ச்சியாக மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய மிளகாய்ப்பொடி வெங்கடேசன், கணபதிலால். மற்றும் கோகுல்வாசன் ஆகிய மூவரும் கடந்த ஜூன் 13ம் தேதியன்று கைது செய்யப்பட்டு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். KR வெங்கடேசன் மீது தொடர்ந்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த நிலையில் கடந்த 17ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.