மிரட்டல் விடுத்த டிரம்ப் தற்போது 2 வாரங்கள் நேரம் எடுப்பதன் காரணம்?
இஸ்ரேல் - ஈரான்

என்னதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் பேசி வந்தாலும், தற்போது வரை அமெரிக்க படைகள் நேரடியாக ஆக்ஷனில் இறங்கவில்லை.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லீவிட், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஈரானை தாக்குவது குறித்து டிரம்ப் 2 வாரங்களில் முடிவெடுப்பார்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் 2 வாரம் வரை டிரம்ப் நேரம் எடுப்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதேபோல அமெரிக்கா தனது சக்தி வாய்ந்த குண்டை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பது குறித்தும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஈரான், ஒரு மலையின் அடியில் தனது அணுசக்தி மையத்தை செயல்படுத்தி வருகிறது. இதனை சாதாரண குண்டுகளால் தாக்கி அழித்துவிட முடியாது. அமெரிக்கா வசம் இருக்கும் ஸ்பெஷல் குண்டுதான் இதற்கு தேவை. அந்த குண்டை பயன்படுத்தினால், ஈரானின் அணுசக்தி மையத்தில் முழுமையாக காலி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. எனவேதான் தாக்குதல் திட்டத்தை டிரம்ப் தள்ளிப்போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
GBU-57 A/B Massive Ordnance Penetrator அல்லது 'பங்கர் பஸ்டர்' எனும் குண்டுதான் ஈரானின் அணுசக்தி இலக்கை தாக்கி அழிக்கும் என அமெரிக்கா நம்புகிறது. இந்த குண்டு 30,000 பவுண்டுகள் எடையுடன், வெடிப்பதற்கு முன்பு 200 அடி ஆழத்திற்குள் துளைத்துச் செல்லும் திறன் கொண்டது. GPS சிக்னலின் உதவியுடன் துல்லியமாக இலக்கை தாக்கும் இந்த குண்டை, B-2 ரக விமானத்திலிருந்து மட்டும்தான் வீச முடியும்.
சிக்கல் என்னவெனில், மலையை குடைந்து சுமார் 260-300 அடி ஆழத்தில் ஈரானின் அணுசக்தி மையம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 200 அடிவரை மட்டும் போகும் குண்டு எப்படி, 300 அடி ஆழகத்தில் இருக்கும் மையத்தை அழிக்கும்? என்பதுதான் தற்போதைய கேள்வி. எனவே, அணுசக்தி மையத்தை முழுமையாக அழிக்க முடியும் என்பதை உறுதிசெய்தால் மட்டுமே ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதனை தி கார்டியன் செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது.
அதேபோல மற்றொரு செய்தி ஊடகமான, ஏபிசி-யின் செய்தியாளர் ஸ்டீவ் கன்யார்ட், இன்னொரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். "ஈரான் மற்றும் வட கொரியா போன்ற இடங்களில் பயன்படுத்துவதற்காகவே 'பங்கர் பஸ்டர்' உருவாக்கப்பட்டது. ஏனெனில் இங்கு வீசப்படும் குண்டுகள் ஆழமாகச் செல்லும் திறன் கொண்டது அவசியமாகும்.
'பங்கர் பஸ்டர்' 5,000 பவுண்டுகள் வெடிபொருட்களைக் கொண்டிருந்தாலும், இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தரையில் ஊடுருவி சில சேதங்களை ஏற்படுத்தும். ஆனால், மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
மட்டுமல்லாது இந்த குண்டு இதுவரை போரில் பயன்படுத்தப்படவில்லை. இந்த குண்டை B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் போர் விமானம் மட்டுமே இதைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இந்த விமானங்கள் மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஈரானை அடைய சுமார் 15 மணி நேரம் ஆகும். இஸ்ரேல் ஏற்கனவே ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பின் பெரும்பகுதியை அழித்துவிட்டதால், இந்த விமானம் நிச்சயம் ரகசியமாகத்தான் பறக்கும்" என்று கூறியுள்ளார்.
இதெல்லாம்தான் டிரம்ப்பின் முடிவை தள்ளிப்போக செய்திருக்கிறது என்பது நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை ஈரானின் அணுசக்தி அமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் அது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.