ஈரான் புதிதாக கையிலெடுத்த ஆயுதம், ஒரு குண்டு எட்டு குண்டுகளாக பிரியும் காட்சி. !
இஸ்ரேல் - ஈரான்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஈரான் மோதல் ஒரு வாரத்தைக் கடந்து தொடர்கிறது. இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரான் அதிக ஆபத்தான கிளஸ்டர் பாம்களை வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதென்ன கிளஸ்டர் பாம்கள்.. இவை எந்தளவுக்குப் பேரழிவு ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் மோதல் கடந்த ஒரு வாரமாகத் தொடர்கிறது. இந்த மோதல் இன்று எட்டாவது நாளில் நுழைந்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரான் கிளஸ்டர் பாம்களை வீசியுள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த கிளஸ்டர் ஏவுகணை சிறிய குண்டுகளைச் சிதறும் என்றும் பொதுமக்கள் உயிரிழப்புகளை அதிகரிக்கவே இதுபோல செய்யப்படுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் சாடியுள்ளது..
ஒரே ஒரு பட்டன்
ஒரு வாரமாக நடக்கும் போரில் கிளஸ்டர் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஈரான் ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.. அந்த ஒரு ஏவுகணை சத்தமில்லாமல் இஸ்ரேல் மேல் பாயும்.. சரியாக 7 கி.மீ உயரத்தில் ஓபன் ஆகி அது எட்டு குண்டுகளாக மாறுமாம்.. அப்படி ஈரான் அனுப்பிய கிளஸ்டர் பாம் இஸ்ரேலின் மத்திய பகுதியில் சுமார் 8 கி.மீ சுற்றளவில் 20 குண்டுகளாக மாறி தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கூடுதலாக எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை.
இந்த சிறிய வெடிபொருட்களில் ஒன்று மத்திய இஸ்ரேல் நகரமான அசூரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கியதில் சேதம் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
கிளஸ்டர் குண்டுகள்
கிளஸ்டர் குண்டுகள் பொதுவாகவே சர்ச்சைக்குரியவை.. ஏனெனில் அவை ஏகப்பட்ட துணை வெடிபொருட்களை வெளியிடும். அவற்றில் சில உடனடியாக வெடிக்காமல் கூடப் போகலாம். அவை மோதல் முடிந்த பிறகும் பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட வெடிக்கலாம். எனவே, இதனால் எப்போது வேண்டுமானாலும் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்பதாலேயே அது சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
வெடிக்காத வெடிபொருட்களின் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் மேப் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் கூறுகையில், "ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியாளர்கள் பொதுமக்களைத் துன்புறுத்தவும், சேதத்தை அதிகரிக்கவும் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. அதற்குத் தக்க பதிலடி தருவோம்" என்றார்.
ஏன் ரொம்பவே ஆபத்து
இந்த கிளஸ்டர் பாம்மின் ஆபத்துகளை விளக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டேரில் கிம்பால், "இவை பரந்த அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள். குறிப்பாகப் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பயன்படுத்தினால் அது ரொம்பவே ஆபத்து. ஏனென்றால் இந்த கிளஸ்டர் பாம்களில் வெடிக்காத வெடிபொருட்கள் நிறைய இருக்கும். அவை போர் முடிந்த பிறகும் கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
மேலும், ஈரான் ஏவுகணைகள் துல்லியமற்றவை. கிளஸ்டர் வெடிமருந்துகளை அவர்கள் ராணுவ இலக்குகளை நோக்கி வீசியிருந்தாலும் கூட அவை ராணுவ இலக்குகளை நோக்கி மட்டுமே பாயும் என்பதை அது பொதுமக்கள் இருக்கும் பகுதிகளையே தாக்க வாய்ப்புகள் அதிகம்" என்றார்.
உலக நாடுகள்
கிளஸ்டர் குண்டுகள் உற்பத்தி, இருப்பு வைத்தல், பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டைத் தடை செய்யும் 2008 சர்வதேச உடன்படிக்கையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இணையவில்லை. இந்த உடன்படிக்கையில் 111 நாடுகளும், 12 பிற நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா உக்ரைன் போர் சமயத்திலும் கூட உக்ரைனுக்கு அமெரிக்கா பல்வேறு ஆயுதங்களை வழங்கின. இருப்பினும், கிளஸ்டர் மருந்துகளை எடுத்தவுடன் வழங்கவில்லை. நீண்ட ஆலோசனைக்கு பிறகே 2023இல் உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடிமருந்துகளை அமெரிக்கா வழங்கியது. ரஷ்யாவும் கூட உக்ரைன் மேல் கிளஸ்டர் பாம்களை பயன்படுத்தியுள்ளன. இந்த மூன்று நாடுகளும் கூட 2008 சர்வதேச உடன்படிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.