செந்தில் பாலாஜி என்ன காந்தி மகானா என அண்ணாமலை காட்டம்

செந்தில் பாலாஜி என்ன நாட்டுக்காக பாடுபட்ட காந்தி மகானா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து புறப்பட்டார்.
இந்த நிலையில் 3 மாதங்கள் அங்கிருந்து படித்து முடித்துவிட்டு லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை பாஜகவினர் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஏதோ தியாகி போல திமுக கொண்டாடுகிறது. செந்தில் பாலாஜி என்ன நாட்டுக்காக பாடுபட்ட காந்தி மகானா? என கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் பேசுகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவு என்ற துறை சார்பில் நடத்தப்பட்ட கல்வி உதவித் திட்டத்தில் சேர்ந்து 3 மாதம் படித்தேன். நோபல் பரிசு வென்றவர்கள், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் எல்லாம் எனக்கு வகுப்பெடுத்தார்கள்.
இந்த 3 மாத காலத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் கால் பதிக்க வேண்டும் என நடிகர் விஜய் வந்திருக்கிறார். அவரை வரவேற்போம். ஆனால் அவர் திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தைதான் விஜய் பேசியுள்ளார். புதிதாக அவர் வேறு எதையுமே பேசவில்லை.
விஜய்யின் பேச்சு, அவரது கொள்கை, கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடுதான் ஒத்து போகிறது.நடிப்பு வேறு அரசியல் களம் வேறு. அவரை எங்கு கேள்வி கேட்க வேண்டுமோ அங்கு கேட்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
திமுக எப்போதும் ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டைதான் பாஜக தொடர்ந்து வைத்து வருகிறது. இன்று அது உண்மையாகிவிட்டது. அவர் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் விமர்சிப்போம். அதே நேரம் நன்றாக செயல்பட்டால் நிச்சயம் பாராட்டுவோம்.
சீமான் புதிய பாதையில் பயணித்து வருகிறார். பாஜகவின் பாதையும் சீமானின் பாதையும் வேறு. தமிழக சட்டசபை தேர்தல் 2026 களம் இதுவரை இல்லாத அளவுக்கு புதியதாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், அவர் திமுகவை விமர்சித்து அதற்கு எத்தனை பேர் பதிலடிக் கொடுத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பதிலடிகள் பெரிதும் பேசப்பட்டு வந்தன. அதில் குறிப்பாக அண்ணாமலையின் வாட்ச் மேட்டர்.
அண்ணாமலை ஊரில் இல்லாத போது செந்தில் பாலாஜி புழலில் இருந்து ரிலீஸாகி அமைச்சரும் ஆகிவிட்டார். அண்ணாமலையும் லண்டனில் இருந்து வந்துவிட்டார். இனி அரசியல் சூடுபிடிக்குமா? செந்தில் பாலாஜி என்ன பதிலடிக் கொடுப்பார்? எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.!