ஐ பி எல் 2025 விளையாட்டில் வெல்லப் போவது யார் ? சுனில் கவாஸ்கர்.!
ஐ பி எல் 2025

ஐ பி எல் 2025 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அந்த 70 போட்டிகளின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் தேவையான வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடித்துள்ளன.
இதைத் தொடர்ந்து அந்த 4 அணிகளில் பிளே ஆஃப் சுற்றில் விளையாடி கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் 2025 ஐபிஎல் கோப்பையை இதற்கு முன் வெல்லாத அணி தான் புதிதாக வெல்லும் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். அந்த அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருக்கும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஏலத்தில் சரியான வீரர்களை வாங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.
கவாஸ்கர் கணிப்பு:
எனவே இம்முறை பஞ்சாப் அணி புதிய சாம்பியனாக கோப்பையை வெல்வதைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் யாருமே பஞ்சாப் அணியை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. பஞ்சாப் அணி ஏலத்தில் ஞானத்துடன் வீரர்களை வாங்கியது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிறைய இளம் இந்திய வீரர்களை அவர்கள் வாங்கியுள்ளனர்”
“உள்ளூரில் என்ன செய்துள்ளார்கள், எப்படி விளையாடினார்கள் என்பதைப் பார்த்து அந்த வீரர்களை பஞ்சாப் அணி நிர்வாகம் வாங்கியுள்ளனர். இருப்பினும் நீங்கள் மாநிலத்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரை பார்த்து வீரர்களை வாங்க மாட்டீர்கள். ஏனெனில் அங்கே பந்து வீச்சின் தரம் குறைவாக இருக்கக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பஞ்சாப் அணியினர் உள்ளூரில் சிறந்த இளம் வீரர்களை பார்த்து வாங்கியுள்ளனர்”
பஞ்சாப் சாதிக்குமா:
“குறிப்பாக 7 சிக்ஸர்களை ஒரே ஆட்டத்தில் அடித்த பிரியான்ஸ் ஆர்யா போன்றவர் நல்ல திறமையைக் கொண்டுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச வீரர்களையும் பஞ்சாப் சிறப்பாகவே தேர்ந்தெடுத்துள்ளது. அந்த வீரர்களை வைத்து வெற்றிகளை பெற்று வரும் பஞ்சாப் அணிக்காக மகிழ்ச்சியடைகிறேன். இம்முறை ஐபிஎல் கோப்பையில் புதிய அணியின் பெயர் இருக்கும் என்று நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்” என கூறினார்.
இதைத் தொடர்ந்து குவாலிபயர் ஒன்று போட்டி வரும் மே 29ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 2வது இடத்தைப் பிடித்த பெங்களூருவை சந்திக்கிறது. அடுத்து நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.