12 லட்சம் வருமான வரி விலக்கு கொடுத்ததற்கு பதிலா.. இதை செஞ்சி இருக்கலாம்! ஆனந்த் சீனிவாசன் கருத்து.!

தமிழகம்

12 லட்சம் வருமான வரி விலக்கு கொடுத்ததற்கு பதிலா.. இதை செஞ்சி இருக்கலாம்! ஆனந்த் சீனிவாசன் கருத்து.!

சென்னை: வருமான வரி விலக்கு குறித்து நிதியமைச்சரின் அறிவிப்பு பேசு பொருளாகியுள்ளது. இது குறித்த கருத்து தெரிவித்திருந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், இந்த வரி விலக்குக்கு பதிலாக சமானிய மக்கள் பயன்படும் வகையில் பல விஷயங்களை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "இன்று எல்லோர் மத்தியிலும் வருமான வரி உச்சவரம்பு நீட்டிப்பு குறித்து விவாதங்கள் எழுந்திருக்கின்றன. அதாவது ரூ.12 லட்சம் வரை வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில விஷயங்களில் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் பழைய வரி விதிப்பு முறையை ஒழித்திருக்கிறார்கள். இனி புதிய வரி விதிப்பு முறைதான் செல்லும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவில் மொத்தம் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். இதில் 7 கோடி பேர் வருமான வரியை பதிவு செய்கிறார்கள். அதில் 2 கோடி பேர்தான் வரியை கட்டுகிறார்கள். இதில் 1.5 கோடி பேர்தான் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆக இது இவர்களுக்கான பட்ஜெட்தான். என்னை மாதிரி அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். எனவே நான் நிர்மலா சீதாராமனுக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், என்னை மாதிரியான ஆட்களுக்கு வருமான வரி சலுகை கொடுப்பதற்கு பதிலாக, சமானிய மக்களுக்கு சலுகை கொடுத்திருக்க வேண்டும். 2 கோடி பேருக்கு சலுகை எனில், மீதி 138 கோடி பேருக்கு என்ன கொடுத்திருக்கிறீர்கள்? ரிலையன்ஸ் மற்றும் நைரா எனும் ரஷ்ய நிறுவனம் ஹாப்பி ஹவர்ஸ் என்கிற திட்டத்தின் கீழ் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.3-5 வரை குறைத்து விற்கிறார்கள்.

தவிர, மொத்தமாக வாங்கினால் ரூ.8-10 வரை தள்ளுபடி தருகிறார்கள். இவர்களால் குறைவாக பெட்ரோலை விற்க முடிகிறது எனில், ஏன் இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனம், பிபிசிஎல், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களால் பெட்ரோலை குறைந்த விலைக்கு விற்க முடியவில்லை?

விலையை குறைக்க வரிதான் முக்கிய தடையாக இருக்கிறது எனில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வருமான வரி விலக்கிற்கு செலவாகும் பணத்தை ஏன் எண்ணெய் மீதான வரியில் போட்டு பெட்ரோல் விலையை குறைக்க கூடாது? அப்படி செய்திருந்தால் சமானிய மக்களுக்கு மிகப்பெரிய பாரம் குறைந்திருக்கும். மக்கள் கையில் பணம் புழங்கியிருக்கும். பணப்புழக்கம் வரும்போதுதான் பொருளாதாரம் உயரும். அது மொத்த நாட்டுக்கும் நல்லதுதானே!

ஆனால் என்னை மாதிரியான ஆட்களுக்கு வரிச்சலுகை கொடுக்கும்போது, அதில் மிச்சமாகும் பணத்தை நாங்கள் வங்கியில் டெபாசிட் செய்து வைத்துக்கொள்வோம். நாங்கள் உடனடியாக செலவை செய்ய மாட்டோம். எனவே, பொருளாதாரம் உயர வாய்ப்பு இல்லை.

அதேபோல எல்ஐசி எனும் பொதுத்துறை நிறுவனம் முற்றிலுமாக நிலைகுலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் பணம் போட்டு வைத்துக்கொள்வார்கள். சாதாரண மக்கள்தான் எல்ஐசியை பயன்படுத்துவார்கள். ஆனால் அரசின் நடவடிக்கை காரணமாக இந்த நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படும். மக்களின் சிறு சேமிப்பு என்பதே நின்றுவிடும். புதியதாக வீடு வாங்குபவர்களையும் இது பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.