இளையராஜா என் சாதிக்காரர் கிடையாது, பெரியார் பிறந்தநாள் விழா உரையில் சத்யராஜ் காரசாரம். !
தமிழகம்

ஈவேரா என அழைக்கப்படும் பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நேற்று ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, எனக்கு பகுத்தறிவு சிந்தனை வந்தது எம்ஜிஆர் படங்களை பார்த்து தான்.
ஒரு படத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்வதற்காக நாலு ரவுடிகள் அந்த பெண்ணை துரத்துவார்கள். அந்த ரவுடிகளை எம்ஜிஆர் தடுத்து அடித்து துரத்தி விடுவார், உடனே அந்த பெண் அண்ணா சரியான நேரமா பார்த்து ஆண்டவன் உங்களை அனுப்பிவிட்டார் என்று சொல்வார். அதற்கு எம்ஜிஆர் என்னை அனுப்பியது ஆண்டவன் என்றால் இதற்கு முன்னாடி வந்த நான்கு ரவுடிகளை அனுப்பியது யார் என்று எம்ஜிஆர் திருப்பிக் கேட்பார்.
அதுதான் எனக்கு முதலில் ஒரு பகுத்தறிவு சிந்தனையை உருவாக்கியது. அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 15 வயதுதான். சாதி எந்த வகையிலும் நமக்கு உதவாது. நான் இங்கு நிற்பதற்கு காரணம் சாதி கிடையாது. தாமஸ் ஆல்வா எடிசனும் லூமியர் பிரதர்ஸ்சும் தான். தாமஸ் ஆல்வா எடிசன் கரண்ட்டை கண்டுபிடித்தார். லூமியர் பிரதர்ஸ் சினிமாவை கண்டுபிடித்தனர்.
என்னை டிஸ்கரேஜ் செய்தது என் சாதிக்காரன் தான். நான் சொந்தக்கார பொண்ணை தான் லவ் பண்ணினேன். ஆனால் நாங்கள் மாடி வீட்டு ஏழை ஆனதும் எங்களை கழட்டி விட்டுட்டாங்க. மாடி வீட்டு ஏழை என்றால் கார் இருக்கும் பெட்ரோல் போட முடியாது, ஃபேன் இருக்கும் ஓடாது. அந்த மாதிரி ஆனா எனக்கு சாதி உதவி பண்ணலே.
பின்பு நான் பிஎஸ்சி பாட்டனி படித்தேன். அந்த படிப்புக்கு அப்போது வேலை கிடைக்காது. என்ன பண்ணலாம்னு யோசிச்சபோது நடிகர் சிவக்குமார் பழக்கமானார். நான் மிமிக்ரி பண்ணியதால் சினிமாவில் வாய்ப்பு தேடி போனேன். அப்போது கூட சொந்த சாதிக்காரன் தான் டிஸ்கரேஜ் பண்ணினான்.
எனக்கு முதல் படம் வாய்ப்பு கொடுத்தவர் டைரக்டர் டிஎன் பாலு. அவர் என்ன சாதின்னு எனக்கு தெரியாது. டான்ஸ் ஆடத் தெரியாத எனக்கு ஹிட் பாடல்களை கொடுத்த இளையராஜா என் சாதிக்காரர் கிடையாது. அதுக்கு அப்புறம் எனக்கு வெற்றி கொடுத்த தேவாவும் என் சாதிக்காரர் கிடையாது. என் கூட ஜோடியாக நடிச்சவங்களும் என் சாதி கிடையாது. அதனால் சாதியால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார்.