டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வியாழன் விடுமுறை அறிவிப்பு.! மீறினால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு.!
டாஸ்மாக்

தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அரசின் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.மாநிலம் முழுவதும் சுமார் 4,000 ற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால் அரசிற்கு கணிசமான வருமானம் இதன் மூலம் வருகிறது.
இந்த கடைகளில் வழக்கத்தை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை விடுமுறை நாள்களில் கூடுதல் விற்பனை நடைபெறும். அதேவேளை ஆண்டுதோறும் முக்கியத்துவம் வாய்ந்த நாள்களில் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மிலாது நபி, மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், வள்ளலார் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது..
அதன்படி, உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் தொழிலாளர் தினம் வருகிற மே 1ஆம் தேதி (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மே 1 அன்று டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.
இந்த உத்தரவை மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.