நெல்லையில் வக்ப் இடப் பிரச்சனையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை.! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
தமிழகம்

நெல்லையில் வக்ப் இடப் பிரச்சனையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை.! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
நெல்லை மாவட்டம், டவுண் பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் (எ) பிஜிலி பாய் அதிகாலை தொழுகை முடித்து வீடு திரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டத்தை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இந்த படுகொலைக்குக் காரணமாக வக்ப் இடப் பிரச்சினை உள்ளதாகவும், அதனால் அவரை எதிர் தரப்பினர் கொலை செய்ததாகவும் கூறப்படும் நிலையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறைக்கு எழுத்துப்பூர்வாக புகார் அளித்துள்ள ஜாகீர் உசேனுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்காமலும், அவரது புகார் குறித்து மேல் நடவடிக்கை எடுக்காமல் அப்பகுதி காவல் உதவி ஆணையாளர் செந்தில் குமார் மற்றும் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனின் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்ப் சொத்துக்களை மீட்க ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த படுகொலை நடைபெற்றுள்ளது.
உயிரிழந்துள்ள ஜாகீர் உசேனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
உயிருக்கு ஆபத்துள்ளது என புகார் அளித்தும் அலட்சியமாகச் செயல்பட்ட உதவி ஆணையாளர் செந்தில் குமார் மற்றும் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ள வக்ப் சொத்துகளை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)