கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.! உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்.!

கோவை

கோவையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.! உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்.!
கிராந்தி குமார்

கோவையில் டேங்கர் லாரி விபத்து நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்ற எல்.பி.ஜி. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி வாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து வாயு கசிவதால் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். டேங்கர் லாரியில் இருந்து 4 மணி நேரமாக எரிவாயு கசிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கோவையில் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் கிராந்தி குமார் இ.ஆ.ப. உடனடியாக அறிவித்தார்.

டேங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் அருகாமையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும் விபத்து நடந்த இடத்தில் 1 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; டேங்கர் கவிழ்ந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மக்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த அசம்பாவிதமும் நடக்கமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக வாயுக் கசிவை நிறுத்தியுள்ளோம்.திருச்சியிலிருந்து டேங்கர் லாரி தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து டீம் வரவழைக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள 10 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லிருந்து 3 மணி நேரத்தில் டேங்கர் லாரியை அப்புறபடுத்தும் பணியாணது நிறைவு பெறும் என நினைக்கிறோம். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆர்.டி.ஓ மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் தான் இந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரியவரும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மேலும் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகளை செய்தனர் அதிகாரிகள்.