முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம். !
செவிலியர்கள் போராட்டம்
சென்னை, டிசம்பர் 24 : முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளதாகவும், மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் அரசின் அறிவிப்பை ஏற்று போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள்முடித்துக் கொண்டதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களாக பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த நலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்பந்த ஊழியர்கள் கைவிடவில்லை. இந்த நிலையில் தான் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்
அரசு அளித்த வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற சென்னை உர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டை கைவிட வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் போராட்டத்தில் கலந்துகொண்ட 750க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்டனர். அங்கும் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட தலைநகர்களிலும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான் தமிழக அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
