சேலத்தில் கள ஆய்வு கூட்டத்தை தானே நடத்தும் எடப்பாடி கே.பழனிச்சாமி

சேலத்தில் கள ஆய்வு கூட்டத்தை தானே நடத்தும் எடப்பாடி கே.பழனிச்சாமி

நெல்லை, குமரி, கும்பகோணம், மதுரை, திருப்பரங்குன்றத்தில் அதிமுக களஆய்வு கூட்டத்தில் நடந்த மோதல், அடிதடியை தொடர்ந்து மாஜி அமைச்சர்களுக்கு தடைவிதித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் தானே தலைமை தாங்கி ஆய்வு கூட்டத்தை நடத்துகிறார்.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நெல்லை, குமரி, கும்பகோணம், மதுரை, திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கோஷ்டி மோதல் காரணமாக ஒருவருக்கு ஒருவர் தகராறு, அடிதடியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சேலத்தில் கடந்த செவ்வாய்கிழமை (26ம்தேதி) களஆய்வு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

htttps://newstodaytamil.com

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் தங்கமணி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் முன்னிலையில் ஏற்பட்ட மோதலையடுத்து சேலம் கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், தனக்கென தனிக்கோஷ்டியை உருவாக்கி வருவதாகவும், ஆதரவாளர்களுக்கே பதவிகள் வழங்கப்படுவதாகவும், நிர்வாகிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கள ஆய்வு செய்ய வரும் முன்னாள் அமைச்சர்களிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட கள ஆய்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை ) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எல்லா இடங்களிலும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் மோதல் ஏற்பட்டால் பெருத்த சிக்கல் ஏற்படும், அவரது ஊரிலேயே கட்சி கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்ற நிலை உருவானால் அவமானமாகிவிடும் என கருதிய, எடப்பாடி பழனிசாமி, கூட்டத்தை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்த இருக்கிறார். அவரே தலைமை தாங்கி இந்த கள ஆய்வு கூட்டத்தை நடத்த உள்ளார்.மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோரை சேலம் கூட்டத்திற்கு வரவேண்டாம் என கூறிவிட்டதாக கூறப்படுகிறது.